சன 04, 2012. கிறிஸ்து பிறப்பு காலத்தில் வரும் புத்தாண்டின் முதல் புதன் பொதுமறைபோதகத்தில்
திருப்பயணிகளைச் சந்தித்தத் திருத்தந்தை, இக்காலத்தின் முக்கியத்துவம் குறித்தே தன் கருத்துக்களை
வழங்கினார். இறைமகன் மனுவுடல் எடுத்த மறையுண்மையையும், உலகின் மீட்பராக தன்னை வெளிப்படுத்தியதையும்
திருஅவை இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் சிறப்பிக்கின்றது. கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த
நம் முதல் பதிலுரை மகிழ்ச்சி என்பதை விவிலிய சாட்சியத்திலிருந்தும், திருஅவைப் பாரம்பரியங்களிலிருந்தும்
கண்டுகொள்கிறோம். தன்னுடைய தெய்வீக வாழ்வில் நம்மைப் பங்குதாரர்களாக மாற்றும் வண்ணம்
இறைவன் மனித நிலையை எடுத்துக்கொண்டார் என்பதை உணர்வதிலிருந்து இந்த மகிழ்ச்சி பிறக்கின்றது.
திருநற்கருணையில் நாம் உள்ளார்ந்த விதமாக அனுபவிக்கும் இந்த வியக்கத்தகு பரிமாற்றம் குறித்து
நாம் ஆழமாக தியானிப்பது, நாம் கடவுளின் உரிமைப் பிள்ளைகளாகும் மேன்மைமிகு மாண்பை புரிந்து
ஏற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்மஸ் என்பது ஒளியின் திருவிழா என திருவழிபாடு
நமக்குக் கற்பிக்கின்றது. ஏனெனில், உலகின் ஒளியாகவும் இறைத்தந்தையுடைய மகிமையின் சுடரொளியாகவும்
இருக்கும் இயேசு, நம்மை இருளிலிருந்து ஒளியின் ஆட்சிக்குள் கொணர்ந்ததுடன், நற்செய்தியின்
ஒளியை அனைத்துப் படைப்புகளுக்கும் எடுத்துச் செல்லும்படி நமக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிதாகப் பிறந்துள்ள மீட்பரை இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நம் இதயங்களுக்குள் வரவேற்போம்.
இவ்வாறு வரவேற்பதன் வழி அவரிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி, புத்துணர்வு மற்றும் ஒளி
எனும் கொடைகள் நம் வாழ்வை மாற்றியமைப்பதாக. இவ்வாறு, புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை,
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும்
தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.