2012-01-03 15:01:02

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 101


குழந்தை இயேசுவின் தெரேசா புனிதராக வேண்டுமென்று தன்னுடைய குழந்தைப் பருவம் முதலே ஆசை கொண்டிருந்தார். அதற்காகத் தன் பதினான்காம் வயதில் கார்மெல் துறவகத்திலே சேர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அத்துறவகத்திலே, நாள்தோறும் திருப்பலியாற்றுகின்ற அருட்பணியாளர், தெரேசாவினுடைய சிறு வயது காரணமாக அவர் துறவகத்தில் சேருவதற்கு மறுப்புத் தெரிவித்தார். ஆனால் தெரேசாவோ, அத்துறவகத்தின் தலைமைச் சதோதரியையும், அம்மறைமாவட்டத்தின் ஆயரையும், அப்போதைய திருத்தந்தை 13ம் லியோ அவர்களையும்கூட நேரில் சந்தித்து 15ம் வயதில் கார்மெல் துறவகத்தில் சேர்வதற்கு முயற்சிச் செய்தார். அவரது முயற்சி கை கூடியது. அதன்பிறகு, சிறு, சிறு ஒறுத்தல் முயற்சிகள் நம்மை இறைவனுக்கு ஏற்றவர்களாக மாற்றும் என முடிவு செய்து, ஒவ்வொரு நாளும் சில ஒறுத்தல் முயற்சிகளைச் செய்து வாழ்ந்தார். காசநோயால் பாதிக்கப்பட்டபோதும், தன்ஒறுத்தல் முயற்சிகளை அவர் கைவிடவில்லை. தன் 24ம் வயதில் தெரேசா இறந்தார். அவர் இறந்த 28ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருச்சபையின் மிக இளம் வயதுப் புனிதராக அறிவிக்கப்பட்டார். அவர் புனிதராக வேண்டுமென்ற ஆசையோடு நின்றுவிடவில்லை. அதற்கான வழிகளைக் கண்டறிந்தார். அவருடைய தளராத முயற்சியால் தடைகளைத் தகர்த்தார். தோல்விகளில் துவண்டு விடாமல் நிலைத்திருந்தார். இன்று கத்தோலிக்கத் திருச்சபையில் மூன்றாவது பெண் மறைவல்லுனராகத் திகழ்கிறார்.

அன்பார்ந்தவர்களே! இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 101. ஓவ்வோர் ஆண்டும், அரசர் அரியணை ஏறிய ஆண்டுவிழாவின் போதும், திருவழிபாட்டிலும் இத்திருப்பாடல் பாடப்பட்டிருக்க வேண்டும் என விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தாவீது அரசர், தன் நாட்டை என்னென்ன வழிகளில் வழிநடத்தப் போகிறார் என யாவே இறைவன் முன்னிலையில் எடுத்த உறுதிமொழியாகவும் இத்திருப்பாடலைக் கண்நோக்குகின்றனர். இது ஒரு நாட்டையோ அல்லது நிறுவனத்தையோ நடத்துகின்றவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. எல்லா வீட்டுத்தலைவர்களும், வீட்டுப்பொறுப்பாளர்களும் புதிய குடும்பத்தை ஆரம்பிக்கும் போது அல்லது புதிய ஆண்டின் முதல் நாளில் எடுக்க வேண்டிய உறுதிமொழியாகவும் இத்திருப்பாடலைப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. இன்னும் சொல்லப்போனால் எல்லா மனிதர்களும் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது, எடுக்க வேண்டிய உறுதிமொழிதான் இத்திருப்பாடல் என்று சொன்னாலும் அது மிகையாகாது. 2012ம் ஆண்டை துவங்கியிருக்கும் நாம், இத்திருப்பாடலைச் சிந்திப்பது பொருத்தமானதெனக் கருதுகிறேன்.

புதிய ஆண்டு பிறக்கும் போது, நம் எல்லாருடைய மனதிலுமே ஆயிரம் ஆயிரம் ஆசைகளும், கனவுகளும் பிறக்கின்றன. புதிய ஆண்டிலே இப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற ஆசைகள் பிறக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. ஆனால் அந்த ஆசைகளையெல்லாம் நிஜமாக்கிக் காட்டுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?
புதிய ஆண்டு பிறக்கும் போது, பள்ளியில் பயிலும் பல இளையோருக்கும், வருகின்ற ஆண்டுப் பொதுத்தேர்விலே மாநிலத்திலேயே முதலிடம் பெறவேண்டும் என ஆசைப் பிறக்கிறது. பணியாற்றுவோருக்கு, பணியாற்றும் இடங்களிலே அன்போடும், அமைதியோடும் பிறருக்கு உதவ வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு, இந்த வருஷம் சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. இன்னும் சிலருக்கு, இந்த புதிய வருஷத்துல குடும்பத்தினரோடு, உடன்பிறந்தவர்களோடு, உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு, சண்டை, சச்சரவு இல்லாத நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. நமக்கு இருக்கிற எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டு புதிய மனிதர்களாக வாழவேண்டும் எனவும் சிலருக்கு ஆசைப் பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கும் போது, இப்படி எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும் நம்மிலே பிறக்கின்றன. அந்த கனவுகளையெல்லாம் நம்மில் எத்தனை பேர் நனவாக்குகிறோம்? நமது ஆசைகளையெல்லாம் எத்தனை பேர் நிஜங்களாக மாற்றுகிறோம்? ஆசைப்பட்டுவிட்டால் மட்டும் நாம் நினைப்பதை அடைந்துவிட முடியாது. மாறாக அவற்றை அடைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

நாம் சிந்திக்கின்ற திருப்பாடல் 101ல் தாவீது அரசர் தன் நாட்டை சிறப்பாக நடத்த ஆசைப்படுகின்றார். அவர் அவரது ஆசையோடு நின்றுவிடவில்லை. அவரது ஆசையை நிஜமாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிகிறார்.
திருப்பாடல் 101: 2, 3, 5 முதல் 8 முடிய உள்ள சொற்றொடர்கள்:
மாசற்ற வழியில் நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்.
தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;
நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;
வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை.
நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்; ஆண்டவரின் நகரினின்று தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.
இவ்வாறு, தன்நாட்டை சிறப்பாக வழிநடத்த இதையெல்லாம் செய்ய வேண்டுமென தாவீது அரசன் திட்டமிடுகிறார். திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்துவிடுமென்றால், வரலாறு முழுவதுமே வெற்றிப் பக்கங்களாகத்தான் இருக்கும். ஆனால் வரலாறு அப்படியில்லையே? வெகுசில மனிதர்கள் தான் வரலாற்றிலும், மனித மனங்களிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கனவுகளை நனவாக்கியவர்கள். அவர்களைப் பற்றித்தான் வாழ்ந்தவர் வழியில் என்ற நிகழ்ச்சியில் நாள்தோறும் கேட்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க மனிதர்கள், கனவுகளை நனவாக்கியதற்கு பின்னால் எத்தனை தோல்விகள், எத்தனை வலி, வருத்தங்கள், வேதனைகள் என்பதை மறந்து விடுகிறோம்.

தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒலிப்பதிவுக் கருவி, திரைப்படம் எடுக்கும் கருவி, மின்விளக்கு என 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது வெற்றிக்குப் பின்னால் எத்தனை, எத்தனைத் தோல்விகள் இருந்தன. ஆனால் எடிசனோ, “ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு” என்றார். “ஒவ்வொரு முறையும் தோற்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றும் சொன்னாராம். அவர் அடைந்த அனைத்துத் தோல்விகளும் சேர்ந்து, அவரது முயற்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. எனவேதான் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதராகத் திகழ்கிறார்.
‘முயற்சித் திருவினையாக்கும்’ என்பதற்கு கஜினி முகமது, எடிசன் என பலரை உதாரணங்களாகச் சொல்லலாம். அவர்களைப் போல வெற்றிகளைச் சுவைக்க ஆசைப்படும் நாம், அவர்களைப் போல கடினமாக உழைக்க வேண்டும், எத்தனை தோல்விகள் அடைந்தாலும் மீண்டும் முயற்சிச் செய்ய வேண்டும் என்ற பாடங்களை அவ்வளவாக உள்வாங்குவதில்லை.
வெற்றிபெற்றவர்களின் வரலாறுகளைக் கேட்கும்போது நம்மில் நம்பிக்கை பிறக்கிறது. நாமும் அவ்வாறு வாழ வேண்டும் என முடிவெடுக்கிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளைச் சிலரே சிந்திக்கின்றோம். அவ்வழிகளில் முன்னேறிச்செல்கின்றவர்கள், பாதையிலே தடைகள் வரும்போது சிலர் தடுமாறிவிடுகிறோம், சிலர் பின்வாங்கிவிடுகிறோம். வெகு சிலரே, தடைகளையும் மீறி, இலட்சியத்தில் நிலைத்திருந்து, இறுதி இலக்கை அடைகிறோம். இதைத்தான் மத்தேயு நற்செய்தி 13 ம் பிரிவில் இடம்பெறுகின்ற விதைப்பவர் உவமை நமக்குச் சொல்கிறது.
அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;
ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.
ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
அன்பார்ந்தவர்களே! நாம் நினைத்தவாறு, ஆசைப்பட்டவாறு நம் கனவுகளை நினைவாக்க, நாம் பின்பற்ற வேண்டிய இன்னொன்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “புதிய ஆண்டிலே என்ன புதிய முடிவு எடுத்திருக்கிறாய்” என்று கேட்டால், மிக நீண்ட பட்டியலை கொடுக்கக்கூடாது. நாம் சாதிக்க விழைபவைகளில் முக்கியமானதை நாம் தேர்ந்துத் தெளிய வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா முதல் 3 போட்டிகளை வென்றபின், அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம், 5 போட்டிகளையும் வெல்வதுதான் உங்கள் திட்டமா என்று கேட்கும்போதெல்லாம், “நாங்கள் அடுத்த ஒரு போட்டி மீது மட்டும் தான் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறோம்” என்றுதான் சொல்வார். அகலக்கால் வைக்கக் கூடாது என்பதைத்தான் இது நமக்குச் சொல்கிறது. ஒருநாள் போட்டிகளில் 219 ரன்களை எடுத்து உலகச் சாதனைப் படைத்தவர் வீரேந்திர சேவாக். இது அவரது ஆசையால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக, அவரது திட்டமிடுதலும், கடின உழைப்பும், முயற்சியுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பார்ந்தவர்களே! துவங்கியிருக்கிற புதிய ஆண்டில் நமது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஒரு காரியத்தை மட்டும் எடுத்து அதிலே வெற்றிபெற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக நம் கனவுகளை நனவாக்குவோம். பிறந்திருக்க புதிய ஆண்டு உங்களுக்கு வெற்றி நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்.








All the contents on this site are copyrighted ©.