டிச.30,2011. இலத்தீன் அமெரிக்காவுக்குத் திருப்பயணம், புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய
உலக ஆயர்கள் மாமன்றம், விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்தல், புதிய புனிதர்களை அறிவித்தல்
உட்பட பல நிகழ்ச்சிகள் திருத்தந்தையின் 2012ம் ஆண்டின் குறிப்பேட்டில் உள்ளன. 2012ம்
ஆண்டு ஏப்ரலில் 85 வயதை எட்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற மார்ச் மாதத்தில்
மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்வார் எனவும், உலகக் கத்தோலிக்கரில்
ஏறக்குறைய பாதிப்பேர் வாழும் இலத்தீன் அமெரிக்காவுக்கு இத்திருப்பயணம் ஓர் உந்துதலாக
இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய உலக ஆயர்கள்
மாமன்றம் 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறும் என்றும், இரண்டாம்
வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11ம் தேதி
விசுவாச ஆண்டு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் தவிர, வழக்கமான
புதன் பொது மறைபோதகங்கள், மூவேளை செப உரைகள், சிறப்புச் சந்திப்புக்கள், திருவழிபாடுகள்
எனப் பல நிகழ்வுகள் திருத்தந்தையின் குறிப்பேட்டில் உள்ளன.