அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி
டிச.29,2011. அர்ஜென்டினா நாட்டில் நிலவும் கொடுமையான வறுமை ஒரு சமுதாய அமைப்பாக மாறிவருவதாகவும்,
இன்றைய இளையோர் பலரின் பெற்றோர் பல ஆண்டுகளாக வேலை எதுவுமின்றி வாழ்ந்து வருவது பெரும்
கவலைக்குரிய ஒரு போக்கு என்றும் அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர். கிறிஸ்மஸ்
பெருவிழாவையொட்டி அர்ஜென்டினா நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் கிறிஸ்மஸ் செய்தியை
அனுப்பியுள்ள அந்நாட்டு ஆயர்கள், மனித உயிர்கள் கருவிலிருந்து கல்லறை வரை மதிக்கப்பட
வேண்டும் என்ற அழைப்பினை விடுத்துள்ளனர். குடும்பங்களில் காணப்படும் வன்முறைகளால்
பாதிக்கப்படும் இளையோர், அதே வன்முறைகளை சமுதாயத்தில் தொடர்வது நாம் சமுதாயத்தில் களைய
வேண்டிய ஓர் அவசரமான சவால் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் புதியத் தலைவர் பேராயர்
José María Arancedo கூறினார். எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து இளையோரும் கல்வி பெறுவதற்கான
வழிகளை அரசும் மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பேராயர் Antonio Marino கூறினார்.