நைஜீரியாவில் மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு
கிறிஸ்தவர்கள்
டிச.27,2011. நைஜீரியாவில் பலரின் உயிரிழப்புகளுக்கு காரணமான அபுஜா கத்தோலிக்க கோவில்
வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து மேலும் வெடி குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில்
நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருவதாக செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அபுஜா புனித தெரேசா கோவிலில் கிறிஸ்மஸ் அன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைத்
தொடர்ந்து அந்நாட்டின் Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல் நடத்திய வன்முறைத்
தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். Boko Haram தீவிரவாத அமைப்பு, நைஜீரியா
முழுவதும் ஷாரியா சட்டம் நிறுவப்படுவதற்கு அழைப்பு விடுத்து வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. இந்த கிறிஸ்மஸ் நாளில் இரு கோவில்கள் தாக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்றுள்ள
இக்குழு, இவ்வாண்டில் மட்டும் 504 கொலைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டும் கிறிஸ்மஸுக்கு
முந்தைய நாள் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.