மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படும்
- ஐ.நா.வின் பொது அவை தீர்மானம்
டிச.22,2011. ஒருவரது மதம் மற்றும் பிற நம்பிக்கை கூறுகளின் அடிப்படையில் பாகுபாடுகள்
காட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படும் என்று ஐ.நா.வின் பொது அவை அண்மையில்
தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தேவநிந்தனை மற்றும் மத அவமதிப்பு ஆகிய சட்டங்களை
நடைமுறைப்படுத்தியுள்ள நாடுகளில் இச்சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானம்,
193 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய பொது அவையில் இத்திங்களன்று குரல் வாக்கெடுப்பின்
மூலம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மத உரிமைகள் பற்றிய விவாதங்கள் எழுந்து
வந்த போதிலும், இவை நாடுகளின் கவனத்தை சரிவர ஈர்க்கவில்லை என்றும், மத உரிமைகளை மறுக்கும்
சட்டங்கள் மனித உரிமை மீறலாகக் கருதப்படும் தீர்மானம் இவ்வாண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது
ஐ.நா.வரலாற்றில் கடந்த பல ஆண்டுகளாகக் காணப்படாத ஒரு நிகழ்வு என்றும் Reuters செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது. மதங்களைக் காக்கும் ஆர்வத்திலிருந்து கவனத்தைத் திருப்பி,
மதங்கள் காரணமாக வன்முறைகளுக்கு ஆளாகும் மக்களைக் காக்க வேண்டும் என்பதில் நம் கவனம்
திருப்பப்பட வேண்டும் என்று பல நாடுகள் அளித்த விண்ணப்பங்களின் வெளிப்பாடாக ஐ.நா.வின்
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.