திருத்தந்தை நிகழ்த்தும் கிறிஸ்மஸ், புத்தாண்டு திருவழிபாட்டு நிகழ்ச்சிகள்
டிச.21,2011. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, திருத்தந்தை கலந்து கொள்ளவிருக்கும்
திருவழிபாட்டு நிகழ்ச்சிகளைத் திருப்பீடத் திருவழிபாட்டு அலுவலகம் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ்
இரவு திருப்பலியைப் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் டிசம்பர் 24ம் தேதி இரவு 11
மணிக்கு திருத்தந்தை நிறைவேற்றுவார். திருப்பலிக்கு முன் அங்கு நடைபெறும் திருவிழிப்பு
நிகழ்ச்சியில் கிறிஸ்மஸ் பாடல்களும் விவிலிய வாசகங்களும் இடம்பெறும். டிசம்பர் 25
ஞாயிறு, கிறிஸ்மஸ் பெருவிழாவன்று திருத்தந்தை "ஊருக்கும் உலகுக்கும்" என்ற Urbi et Orbi
உரையை புனித பேதுரு பசிலிக்கா பேராலய உயர் மாடத்திலிருந்து பேராலய வளாகத்தில் கூடியிருக்கும்
மக்களுக்கும், மற்றும் நேரடி ஒளிபரப்பின் மூலம் உலகத்திற்கும் வழங்குவார். டிசம்பர்
31 வருடத்தின் இறுதி நாளன்று புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆண்டு இறுதி நன்றியைப்
பகர்வதர்காக மாலை திருவழிபாட்டில் ஈடுபடும் திருத்தந்தை, அதற்கு அடுத்து, புத்தாண்டு
நாளன்று உலக அமைதி நாளுக்கென்று செய்தி ஒன்றை வழங்குவார். ஜனவரி 6ம் தேதி நடைபெறும்
இறைவனின் வெளிப்பாடு பெருவிழாவன்று, இரு பேராயர்களைத் திருநிலைப்படுத்தும் திருத்தந்தை,
ஜனவரி 8ம் தேதி, இயேசுவின் திருமுழுக்குத் திருநாளன்று, வத்திக்கான் மரபுப்படி, Sistine
ஆலயத்தில் பல குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்குவார்.