கிறிஸ்மஸ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இறைவன் பற்றிச் சிந்திக்க உதவுகின்றன
– இரஷ்யத் திருப்பீடத் தூதர்
டிச.17,2011. உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் கொண்டாடப்படும்
கிறிஸ்மஸ், வெளியுலகச் சோதனைகளின் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை
உணருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது என்று இரஷ்யாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர்
Ivan Jurkovič கூறினார். கடந்த காலத்தின் நுகர்வுத்தன்மையைக் குறைப்பதற்கு, இவ்வாண்டு
கிறிஸ்மஸ் காலம் வாய்ப்பை வழங்கியிருக்கின்றது என்று கூறிய பேராயர் Jurkovič, இருப்பதை,
இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை இக்காலம்
அதிகமாக நினைவுபடுத்துகின்றது என்றும் தெரிவித்தார். இரஷ்யாவுக்குத் திருப்பீடத்
தூதராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்திருப்பதையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்திற்குப்
பேட்டியளித்த பேராயர் Ivan Jurkovič, இவ்வாறு கூறினார். கிறிஸ்தவக் கோட்பாடுகளின்
அடிப்படையில், மனித மாண்பையும் குடும்பத்தையும் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்கு, ஆர்த்தடாக்ஸ்
சபையுடன் நல்லுறவை வளர்ப்பது உதவியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.