வாழ்ந்தவர் வழியில் டிசம்பர் 13 ...... நா. பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன்,
மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய
புனைப்பெயர்களால் அறியப்படும் இவர், தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்'
நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய புதினங்கள் சமகாலச்
சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்களைப் பற்றியதாய்
அமைந்துள்ளன. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான “குறிஞ்சி மலர்” மற்றும் “பொன் விலங்கு”
தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. இவர் சாகித்திய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.
1932ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடியில் ஒரு சராசரி
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில்
ஆசிரியராய் பணியாற்றினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி
இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின்
அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய
முதல் புதினம், குறிஞ்சி மலர். பின்னர் 1965ம் ஆண்டில் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக
தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். அதன் ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் 23 ஆண்டுகள் இருந்து
அதை நடத்தினார். 1979ம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த
தினமணிக்கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள்,
நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து
விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து “சுந்தரக் கனவுகள்” என்கிற தலைப்பில்
ஒரு புதினம் எழுதினார். இவர் அதிகமானப் பயணக் கட்டுரைகளையும் எழுதினார். இரஷ்யா, இங்கிலாந்து,
போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச்
சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. சாகித்திய அகாடமி பரிசு (சமுதாய
வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளையும்
விருதுகளையும் பெற்றிருக்கிறார் நா.பார்த்தசாரதி. நாற்பத்தைந்து வயதிற்குமேல் முதுகலை
பட்டமும் பெற்று முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டிடக் கலையும்
நகரமைப்பும் என்ற தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் முனைவர் பட்டம் கிடைக்க
இரண்டே நாள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
இவர் காலமான அந்த நாள் 1987ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ஆகும். சாயங்கால மேகங்கள், மணிபல்லவம்,
ஆன்மாவின் ராகங்கள், குறிஞ்சி மலர், பொன் விலங்கு, சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம்,
ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, துளசி மாடம், பாண்டிமாதேவி, நித்திலவல்லி, வஞ்சிமாநகரம்,
சத்தியவெள்ளம், வெற்றி முழக்கம் ஆகியவை நா.பார்த்தசாரதியின் புதினங்கள் ஆகும்.