நியுயார்க் பேராயர் - மனித மாண்பு, கத்தோலிக்க விசுவாசத்தின் மையம்
டிச.10,2011. ஒவ்வொரு மனித வாழ்வும் கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கின்றது
என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன் கூறினார். நோத்ரு
தாமின் மனித மாண்பு குறித்த திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பேராயர் டோலன், கத்தோலிக்கக்
கோட்பாடுகள் பற்றிப் பேசும் போது, மூவொரு கடவுள், இயேசுவின் மனித அவதாரம், மீட்பு, திருநற்கருணை
போன்றவைகளைப் பொதுவாகக் குறிப்பிடுகிறோம், ஆனால் நாம் ஏன் மனித மாண்பு பற்றிய கோட்பாட்டை
ஒருபோதும் இணைப்பதில்லை என்பது தனக்கு வியப்பாக இருக்கின்றது என்று கூறினார். குழந்தைகளுக்குச்
சிலுவை போடக் கற்றுக் கொடுக்கும் போதே மனித மாண்பு பற்றிய கோட்பாட்டையும் கற்றுக் கொடுக்க
வேண்டும், ஏனெனில் இது கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படைச் சாரமாக இருக்கின்றது என்று
கூறினார் பேராயர் டோலன். “இறைவனின் மகிமை மனிதன் முழுமையாய் வாழ்வதே” என்று சொன்ன
இரண்டாம் நூற்றாண்டு ஆயர் புனித இரேனியுசின் போதனைகளையும் சுட்டிக் காட்டினார் அமெரிக்க
ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் டோலன்.