"The Little Prince"
என்பது ஒரு கற்பனைக் கதை. அரிதான, அழகான கற்பனையும், கருத்தாழம் மிக்க உணமைகளும் நிறைந்த
அற்புதக் கதை. வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின்
கதை. புமிக்கு வந்த இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒரேநாளில் நட்பை
மலரச் செய்த அந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் இளவரசன் வந்ததும், நரி அவனிடம் உரிமையாய்,
"நீ நேற்று வந்த நேரத்திற்கே இன்றும் வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்."
என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும்
விளக்கம் அழகானது. "நீ தினமும் நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால்,
நான் மூன்று மணிக்கே மகிழ்வாக இருக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு
நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்க முடியாதே" என்று நரி சொல்கிறது.
நல்லதொன்று நடக்கப்போகும் வேளையில், மனதுக்குப் பிடித்த ஒருவரை எதிர்பார்த்திருக்கும்
வேளையில், அந்த நிகழ்வை, அந்த நண்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது.
நிகழ்ச்சிக்கு முன் உருவாகும் மகிழ்ச்சி. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம். நான்
வாழும் இயேசுசபை துறவு இல்லத்தில் மூன்று குருக்கள் 90 வயதைத் தாண்டியவர்கள். அவர்களில்
ஒருவர் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து பல ஆண்டுகளாகப் பணி செய்து ஒய்வு பெற்றிருப்பவர்.
ஒவ்வொரு வாரமும், ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் அவரைக் காண ஒரு நண்பர் வருவார். அவரது
வருகையைப் பற்றி இந்த குரு ஞாயிறு காலையிலேயே எங்களிடம் பேச ஆரம்பித்து விடுவார். நிகழ்ச்சிக்கு
முன் உருவாகும் மகிழ்ச்சி.
பொதுவாக எந்தக் குடும்பத்திலும் குழந்தை ஒன்று பிறக்கப்போகிறது
என்பது, மகிழ்வு கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். அதேபோல், மனித சமுதாயம் என்ற குடும்பத்தில்
இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு
திருவழிபாடு நம்மை அழைக்கிறது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த
ஞாயிறை, Gaudete Sunday அதாவது, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். புனித பவுல் அடியார்
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இறை வார்த்தைகள்
இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்றன. ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்:
மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில்
உள்ளார். (பிலிப். 4:4-5) மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று
பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு
என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.
கிறிஸ்து பிறப்புக்கு,
கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு இரு வாரங்கள் இருக்கும்போதே இந்த மகிழ்வைப் பற்றிப் பேசவேண்டுமா
என்று ஒரு கேள்வி எழலாம். ஆனால், வர்த்தக உலகம் ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த மகிழ்வைப்
பற்றி பேச ஆரம்பித்துவிட்டதே. வர்த்தக உலகைப் பொருத்தமட்டில், நவம்பர் மாத இறுதியில்
கிறிஸ்மஸ் ஆரம்பமாகிவிட்டது. கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைப் பற்றிய இலக்கணங்களை வர்த்தக உலகம்
கடந்த ஒரு மாதமாக, வெவ்வேறு வகையில் சொல்லி வருகிறது. இன்று திருச்சபையும் கிறிஸ்மஸ்
மகிழ்ச்சியைப் பற்றி சொல்கிறது. வர்த்தக உலகம் சொல்லும் மகிழ்வைப் பற்றி ஒவ்வொரு நாளும்
ஊடகங்கள் வழியாகக் கேட்டு வரும் நாம், திருச்சபையும், விவிலியமும் சொல்லும் மகிழ்ச்சியைப்
பற்றி, மகிழ்ச்சியின் உண்மையான இலக்கணம் என்ன என்பதைப் பற்றி ஒரு நாளாகிலும் சிந்திக்க
வேண்டாமா?
உண்மையான மகிழ்வு என்றால் என்ன என்பதைச் சொல்ல பல கதைகள் உண்டு. அவைகளில்
ஒன்று அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சொன்ன கதை. இந்தக் கதையை அவர் சொல்வதாகவேக் கேட்போம்:
பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் என் வீட்டுக் கதவைத் தட்டியபடி
ஒரு சிறுவனும், சிறுமியும் நின்றனர். அவர்கள் வறுமையில்
இருந்தனர் என்பதை அவர்கள் அணிந்திருந்த உடையே பறைசாற்றியது. "உங்களிடம் எதுவும் பழைய
பத்திரிக்கைகள் உள்ளனவா?" என்று அக்குழந்தைகள் என்னிடம்
கேட்டனர். அப்போதுதான் அவர்களது கால்களை நான் பார்த்தேன். காலணிகளுக்குப் பதில் அவர்கள்
பழையத் தாள்களைக் கொண்டு கால்களை மூடியிருந்தனர். அவர்களை வீட்டுக்குள் வரச்சொன்னேன்.
அவர்கள் கால்களில் கட்டப்பட்டிருந்த அந்தத் தாள்கள் பனியில் ஊறிப்போயிருந்ததால், வீட்டின்
தரையில் ஈரமான, அழுக்கான தடங்களைப் பதித்தன. சுடச்சுட தேநீரும்,
சில ‘பிஸ்கட்டு’களும்
தந்தேன். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்
சென்று, பழைய நாளிதழ்கள், அதோடு அவர்கள் அணிவதற்கு சில உடைகளையும்,
காலணிகளையும் கொண்டு வந்தேன். தேநீரை அருந்திய சிறுவன் என்னிடம், "நீங்கள்
பணக்காரரா?" என்று கேட்டான். எனக்குள் எழுந்தது சிரிப்பு.
நான் எவ்வளவு ஏழை என்பது அவர்கள் அமர்ந்திருந்த அந்த ‘சோபா’வைப்
பார்த்தாலே தெரியும். நடுத்தர வருமானம் உள்ள என்னைப் பார்த்து அவன் அந்தக் கேள்வியை ஏன்
கேட்டான் என்று புரியாமல், "நானா, பணக்காரியா?
இல்லையே. ஏன் அப்படி கேட்கிறாய்?" என்று அவனிடமே
கேட்டேன். அப்போது அவனது தங்கை என்னிடம், "நீங்கள் தேநீர்
கொடுத்த இந்த ‘கப்’பும் தட்டும்
ஒரே நிறத்தில் உள்ளன. அதனால், நீங்கள் பணக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்."
என்று பதில் சொன்னாள் அந்தச் சிறுமி.
இதைச் சொன்னபின்,
நான் தந்தவைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். என்னிடம்
நன்றி என்று கூட அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் நன்றி சொல்லவும் தேவையில்லை என்பதை உணர்ந்தேன்.
சொல்லப்போனால், நான்தான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
என்னைப் பற்றி நானே இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ளும்படி செய்த அவர்களுக்கு நான்தான்
நன்றி சொல்லவேண்டும். அவர்கள் சென்றபின், அந்த
‘கப்’பையும் தட்டையும் பார்த்தேன்.
ஒரே நிறத்தில் அவை இருந்தது அவர்கள் கண்களில் ஒரு பணக்காரியாக என்னைக் காட்டியது. ஆனால்,
என் கண்களில், என் எண்ணத்தில் நான் என் வறுமையைப்பற்றி
மட்டுமே எண்ணி வருந்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். உண்ண உணவு, உடுத்த
உடை, நான் வாழ ஒரு வீடு இவைகளைத் தந்த இறைவனை அப்போது நன்றியோடு
எண்ணிப் பார்த்தேன். வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது,
காகிதங்களில் சுற்றப்பட்ட அவர்களது நனைந்த, அழுக்கான
பாதங்கள் விட்டுச்சென்ற தடங்களைச் சத்தம் செய்யாமல் விட்டுவைத்தேன். நான் பணம் படைத்தவள்
இல்லையே என்று ஏங்கும்போதெல்லாம், அந்தப் பாதச் சுவடுகள்
நான் எவ்வளவு பணக்காரி என்பதை மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுறுத்த வேண்டும் என்பதற்காக
அந்தச் சுவடுகளை துடைக்காமல் விட்டுவைத்தேன். அந்த வீட்டில் அவ்விரு குழந்தைகளின்
பாதங்கள் மட்டும் பதியவில்லை. அவர்கள் வரவால் அந்தப் பெண்ணின் மனதில் பல அற்புத பாடங்களும்
பதிந்துவிட்டன. குழந்தை வடிவில் வரும் கண்ணனின் பாதங்களை வீட்டுக்குள் வரைந்தால், நல்லவைகள்
நடக்கும் என்று எண்ணுவது இந்திய மண்ணில் ஓர் அழகிய மரபு. குழந்தை வடிவில் இறைவன் வரும்
இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய
பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும்
ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.
“உள்ளதை அனுபவித்து
மகிழ்பவர்களே உண்மையில் செல்வந்தர்கள்” (The truly rich are those who enjoy what they
have.) என்பது ஒரு யூதப் பழமொழி. இல்லாத தேவைகளையெல்லாம் உருவாக்கி இன்னும் அதிகம், அதிகமாய்
பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்மஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. இதற்கு
நேர் மாறான பாடங்களை, உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வைப் பற்றிய பாடங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள்
நமக்குச் சொல்லித் தருகின்றன. நம்மிடம் உள்ளவைகள் இறைவன் அளித்துள்ள கொடைகள் என்றும்,
அக்கொடைகளுக்காக நன்றியுள்ளவர்களாய் வாழ்வதில்தான் உண்மை மகிழ்வு உள்ளது என்றும் இன்றைய
வாசகங்கள் சொல்லித் தருகின்றன. இந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் முதல் இரு வாசகங்களின்
ஒரு சில வரிகளை இப்போது கேட்போம்: இறைவாக்கினர் எசாயா 61: 10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்:
மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட
மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்:
நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
தெசலோனிக்கருக்கு எழுதிய
முதல் திருமுகம் 5: 16-24 எப்பொழுதும், மகிழ்ச்சியாக
இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும்
விட்டு விலகுங்கள்...அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.
தன்னிடம்
உள்ளவற்றைக் கொண்டு மன நிறைவும் மகிழ்வும் அடைந்த திருமுழுக்கு யோவானை இன்றைய நற்செய்தியில்
நாம் சந்திக்கிறோம். தான் யார் என்பதையும் தனக்கு அளிக்கப்பட பணி எத்தகையது என்பதையும்
மிகத் தெளிவாக உணர்ந்திருந்தவர் திருமுழுக்கு யோவான். தான் உலக மீட்பர் அல்ல, தான் அந்த
மீட்பர் வருவதற்கான பாதையைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இதை உணர்ந்தது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இதை வெளிப்படையாகவும் சொல்லி வந்தார்.
இதைத்தான் இன்றைய நற்செய்தி கூறுகிறது. இன்றைய நற்செய்தியில் அவரைப் பற்றி கூறப்படும்
வரிகளில் ஒரு சில: யோவான் நற்செய்தி 1: 6-8, 19-20 கடவுள்
அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று
பகருமாறு வந்தார்... அவர் அந்த ஒளி அல்ல; மாறாக,
ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்... “நீர்
யார்?” என்று கேட்டபோது அவர், “நான்
மெசியா அல்ல”என்று அறிவித்தார். இதை அவர்
வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
நற்செய்தியின்
இந்த வரிகள் எனக்கு கிறிஸ்மஸைப் பற்றிய ஒரு உருவகத்தை நினைவுபடுத்துகிறது. கிறிஸ்மஸ்
பெருவிழாவை விவரிக்கக் கூறப்படும் பல உருவகங்களில் என் மனத்தைக் கவர்ந்த உருவகம் இது.
நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய புயல் ஒன்று வீட்டைச் சூழ்ந்தபோது, தனி அறையில் படுத்திருக்கும்
தன் சிறுவயது மகன் பயந்துவிடுவானே என்று அவனைப் பார்க்கச் செல்கிறார் ஒரு தந்தை. அங்கு,
இருளில் படுத்திருக்கும் மகனைக் காண ஒரு டார்ச் விளக்கை எடுத்துச் செல்கிறார். அவர் கதவைத்
திறந்து டார்ச் விளக்கை அடித்ததும் சப்தம் கேட்டு, எழுந்த மகன் பயத்தில் "யாரது?" என்று
கேட்கிறான். தந்தை உடனே அந்த டார்ச் விளக்கை அவன் மீது அடித்து, அவனை இன்னும் பயத்தில்
ஆழ்த்தாமல், அந்த டார்ச் ஒளியைத் தன் மீது திருப்பி, "மகனே, நான் தான்!" என்று சொல்கிறார்.
மகனும் அந்த ஒளியில் தந்தையைக் கண்டு பயம் தெளிகிறான். மகிழ்கிறான். இருள் சூழ்ந்த உலகில்
தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா.
அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்கு திருமுழுக்கு யோவான்.
நம்மைப்
பற்றிய தெளிவான எண்ணங்கள், நம்மிடம் உள்ளவைகளைக் கொண்டு நிறைவடையும் ஓர் உள்ளம் இவைகளில்
நம் உண்மையான மகிழ்வு உள்ளதென்று இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. உண்மையான
மகிழ்வு என்பது வண்ணத்துப் பூச்சியைப் போன்றது. விரட்டி விரட்டி அதைப் பிடிக்க நாம் ஓடுகிறோம்.
பின்னர், களைத்துப் போய் நாம் அமரும்போது, நம் பிடிக்குள் வராமல் பறந்த அந்த வண்ணத்துப்
பூச்சி நமது தோள்களில் வந்து அமர்கிறது. மகிழ்வு என்பது சின்னச் சின்ன எளிதான உண்மைகளில்
மென்மையாக ஒளிர்கிறது. அமைதியாக அமர்ந்து, நம் வாழ்வில் உள்ளவைகளை நன்றியோடு எண்ணிப்பார்த்தால்
இந்த மகிழ்வு தானாகவே நம் தோள்களில் அமரும், நம் மனங்களை நிரப்பும். மகிழும் ஞாயிறு இந்த
வரத்தை நமக்குத் தர மன்றாடுவோம்.