திருப்பீடத்துக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே புதிய ஒப்பந்தம்
டிச.09,2011. திருப்பீடத்துக்கும் மொசாம்பிக் குடியரசுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும்
வலுப்படுத்தும் நோக்கத்தில் இவ்விரு தரப்பும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மொசாம்பிக்கில்
கத்தோலிக்கத் திருச்சபையின் இருப்பை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது, திருச்சபையில் நடைபெறும்
திருமணங்களையும் திருச்சபை சார்ந்த கல்வித் தகுதியையும் ஏற்பது உட்பட 23 விவகாரங்கள்
கொண்ட ஒப்பந்தத்தில் இவ்விரு தரப்பினரும் இப்புதனன்று கையெழுத்திட்டுள்ளனர். தெற்கு
ஆப்ரிக்காவில் மொசாம்பிக் குடியரசில்தான் இத்தகைய உடன்பாடு முதன் முதலாக கையெழுத்தாகியுள்ளது
என்று திருப்பீடம் அறிவித்தது. திருப்பீடத்தின் சார்பில் மொசாம்பிக் திருப்பீடத்
தூதர் பேராயர் Antonio Arcari யும், மொசாம்பிக் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்
Oldemiro Julio Marques Baloi யும் இவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.