அமல அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை
டிச.08,2011. பாவத்தால் மனித குலம் இழந்த பல நன்மைகளை தன் மகன் வழியாக இறைவன் மீண்டும்
தருவதற்கு விழைந்ததாலேயே, மரியாவை ஒரு அருள் வடிகாலாகத் தேர்ந்தெடுத்தார் என்று திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கூறினார். டிசம்பர் 8 இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அமல அன்னை மரியாவின்
திருநாளையொட்டி சிறப்பு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, அருள் நிறைந்தவரே வாழ்க
என்று அன்னை மரியாவை வாழ்த்தும்போதெல்லாம், அவர் அருள் வடிவான இறைவனை நமக்கு வழங்கியவர்
என்பதை நினைவு கூர்கிறோம் என்று கூறினார். அமல அன்னைப் பெருவிழா உருவானதற்குக் காரணமாயிருந்த
திருத்தந்தை 11ம் பத்திநாதர், மற்றும் அன்னையின் அமல உற்பவம் குறித்து இறையியல் ஆக்கங்களை
தந்துள்ள பல புனிதர்கள் ஆகியோரின் எண்ணங்களை தன் உரையில் மேற்கோள்களாகக் காட்டிப் பேசினார்
திருத்தந்தை. திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் அனைவரும் அன்னை மரியாவைப் போல்
இறைவனை நம் வாழ்வில் முழுமையாக வரவேற்கக் காத்திருப்போம் என்று கூறி, அனைவருக்கும் தன்
அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தன் மூவேளை செப உரையின்
இறுதியில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஸ்பானியம்,
ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் அன்னை மரியாவின் பெருவிழா வாழ்த்துக்களைக்
கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அமல மரியா பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர்களுக்குத்
தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.