UNICEFன் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் கலைஞர் அமீர் கான்
டிச.01,2011. பாலிவுட் என்று வழங்கப்படும் இந்தித் திரைப்பட உலகில் புகழ்பெற்ற கலைஞரான
அமீர் கான் ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனமான UNICEFன் நல்லெண்ணத் தூதராக இப்புதனன்று
அறிவிக்கப்பட்டார். தனக்குத் தரப்பட்டுள்ள இந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி, இந்தியாவில்
பசியால் வாடும் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்யவிருப்பதாக, 46 வயது
நிரம்பிய அமீர் கான் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு
ஒன்று தேவையான உணவின்றி வாடுவதாகவும், இதனால் பல்வேறு நலக் குறைகளுக்கு ஆளாவதாகவும் ஐ.நா.செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது. UNICEF நிறுவனத்துடன் ஏற்கனவே பல்வேறு முயற்சிகளில் தன்னை
ஈடுபடுத்திவரும் அமீர் கான், இன்னும் தீவிரமாக தன் பணியைச் செய்யவிருப்பதாகவும், இந்தியாவின்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது
என்றும் எடுத்துரைத்தார். இந்தியா அகில உலகில் வளர்ந்து வரும் ஒரு சக்தி மிக்க நாடு,
இந்த நாட்டின் எதிர்காலமாய் இருக்கும் குழந்தைகளின் நலவாழ்வுக்கென உழைக்க நாங்கள் தெரிவு
செய்திருக்கும் நடிகர் அமீர்கான் கட்டாயம் நல்லதொரு மாற்றத்தைக் கொணர்வார் என்ற தன் நம்பிக்கையைத்
தெரிவித்தார் UNICEF அதிகாரி Karin Hulshof.