கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபைக்குத் திருத்தந்தையின்
வாழ்த்துச் செய்தி
நவ.30,2011. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும் நிலை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவங்கள்
அதிகரித்துவரும் இன்றையச் சூழலில் நற்செய்தியின் உண்மைகளை எடுத்துரைப்பதற்கு புதுப்பிக்கப்பட்ட
அர்ப்பணத்துடன் நாம் செயல்படவேண்டிய தேவை உள்ளது என கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical
கிறிஸ்தவ சபை குலமுதல்வருக்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார். நவம்பர்
30, இப்புதனன்று கொண்டாடப்படும், Ecumenical கிறிஸ்தவ சபையின் பாதுகாவலரான திருத்தூதர்
புனித அந்திரேயாவின் திருவிழாவையொட்டி இஸ்தான்புல்லுக்கு கர்தினால் Kurt Koch தலைமையில்
திருப்பீடத்தின் சார்பாகச் சென்றுள்ள ஒரு குழுவின் மூலம் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளதிருத்தந்தை,
முதலாம் பர்த்தலோமெயோ குலமுதல்வராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் இவ்வாண்டு நிறைவுறுவதையும்
நினைவு கூர்ந்து வாழ்த்தினார். இன்றைய உலகின் மக்களில் எழும் ஆழமான கேள்விகளுக்கும்
ஆன்மீக ஏக்கங்களுக்கும் விடை காண உதவும் வகையில் கிறிஸ்தவ சபைகளின் நற்செய்தி அறிவிப்பு
பணி இருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இத்தகைய நம் பணி வெற்றியடைய
வேண்டுமெனில், முதலில் கிறிஸ்தவ சபைகளிடையே திகழவேண்டிய ஒன்றிப்பு எனும் சாட்சியம் இன்றியமையாதது
என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் பாப்பிறை. கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில்
Ecumenical கிறிஸ்தவ சபையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், சர்வதேச நிலைப்பாடுகளில்
கிறிஸ்தவ மதிப்பீடுகளை மேம்படுத்தும் குலமுதல்வர் முதலாம் பர்த்தலோமெயோவின் அறிவார்ந்த
முயற்சிகளையும் தான் பாராட்டுவதாக திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.