அன்னை திரேசாவின் பிறரன்பு சபை சகோதரி பிணையத்தில் விடுவிக்கப்பட்டார்
நவ.29,2011. குழந்தைகளை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று இலங்கை
காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட அன்னை திரேசாவின் பிறரன்பு சபை
அருள்சகோதரி மேரி எலிசா நீதிமன்றத்தால் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். அருள்தந்தை
சுனில் டி சில்வா மற்றும் இலங்கை காரித்தாஸ் அலுவலகத்தின் அருள்சகோதரி நிலாந்தி ஆகியோர்
பிணையத் தொகையைச் செலுத்திய பின், அருள்சகோதரி எலிசாவை விடுவித்த நீதிபதி Yvonne Fernando,
அவரின் பயணக்கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரியதுடன், வழக்கு முடியும்வரை
அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் கட்டளையிட்டார். அருள்சகோதரி எலிசா இதுவரைப்
பணியாற்றிய இல்லத்தில் அல்லாமல் வேறொரு இல்லத்தில் தங்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.