நேபாளக் கிறிஸ்தவக் கோவிலை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி.
நவ.28,2011. நேபாளத் தலைநகர் காட்மண்டுவிலுள்ள கிறிஸ்தவ சபை கோவில் ஒன்றை வெடிகுண்டு
மூலம் தாக்க முயன்ற சிலரின் முயற்சி காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது. கோவிலின்
வாசலில் ஒரு சாக்குப்பை அனாதையாகக் கிடந்ததையொட்டி கோவில் அதிகாரிகள் காவல்துறைக்கு செய்தி
வெளியிட, இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் வல்லுனர்கள் வந்து மூன்று வெடிகுண்டுகளை வலுவிழக்க
வைத்துள்ளனர். இக்குண்டுகள் வெடித்திருந்தால், கோவிலுக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள
பகுதிகளுக்கும் பெரும் சேதம் விளைவித்திருக்கும் என அறிவித்துள்ளார் இராணுவ அதிகாரி ஒருவர். வெடிகுண்டு
வைத்து கோவிலைத் தாக்க முயன்றவர் யார் எனத் தெரியாத நிலையில், நேபாளத்தில் கோவில்களில்
பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கத்தோலிக்கத் தலத்திருச்சபை அதிகாரிகளும் ஏனைய கிறிஸ்தவ
சபை அதிகாரிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் நேபாளத்தில்
கிறிஸ்தவ அமைப்பின் கட்டடம் ஒன்று குண்டு வீசி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.