திருவருகைக் காலத்தின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை
நவ.28,2011. இறைவன் தன் தெய்வீக மகிமையைக் களைந்து நம்மைப்போல் மனிதனாக உடலெடுத்த அவரின்
வருகைக் குறித்த நினைவுகளை நம்மில் தட்டியெழுப்புவதாக திருவருகைக்காலம் உள்ளது என இஞ்ஞாயிறு
மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கடவுள் இல்லாமை போன்றும்
கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போலும் தோன்றும் இன்றைய நவீன உலகில், திருவருகைக்காலம்
என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்ற பாப்பிறை, இறை அன்பிலிருந்து
வெளிப்படும் மீட்பு எனும் மறையுண்மையைத் திறந்த மனதுடன் ஏற்றவர்களாக, கிறிஸ்தவ சமூகங்களோடு
வாழ்ந்து விசுவாசத்தின் புதிய பயணத்தைத் தொடர இத்திருவருகைகாலம் அழைப்பு விடுக்கிறது
என உரைத்தார். இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் ' கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!'
என்ற வார்த்தைகளையும் எடுத்துரைத்த பாப்பிறை, எவ்வாறு முளையானது மண்ணிலிருந்து புறப்பட்டு
விண்ணை நோக்கி வளர்கிறதோ, அவ்வாறே நம் வாழ்வும் இவ்வுலகை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக
அதையும் தாண்டியது என்பதை இயேசுவின் இவ்வார்த்தைகள் நினைவுறுத்தி நிற்கின்றன என்றார்.
கடவுளை விலக்கி வைத்து மனிதனே அனைத்திற்கும் தலைவன் என்பது போன்ற ஒரு மாயை இன்றைய உலகில்
உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், சிலவேளைகளில் இயற்கையிலோ சமூகத்திலோ அதிர்ச்சி தரும்
நிகழ்வுகள் இடம்பெறும்போது இறைவன் மக்களைக் கைவிட்டு விட்டது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது
என்பது குறித்தும் எடுத்துரைத்த பாப்பிறை, உண்மையான தலைவர் என்பவர் மனிதன் அல்ல மாறாக
கடவுளே என்பதையும் சுட்டிக்காட்டி, விழிப்பாயிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.