2011-11-28 15:34:40

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு பொறுப்பான நம்பத்தகு பதிலுரைகள் தேவை என்கிறார் பாப்பிறை


நவ.28,2011. தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இடம்பெறும் தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்த ஐநா கருத்தரங்கு, இன்றைய உலகின் ஏழைகளையும் வருங்காலத் தலைமுறைகளையும் மனதிற்கொண்டு நல்ல முடிவுகளை எடுக்கும் என்ற நம்பிக்கைக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இது குறித்துப் பேசிய பாப்பிறை, இயற்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாயுக்கள் காற்றில் கலப்பதைக் குறைக்கும் முயற்சிகளை ஐநா கருத்தரங்கு மேற்கொள்ளும் என்பதில் தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய சமூகம் அனுபவிக்கும் தட்ப வெப்ப நிலை மாற்றப் பிரச்னைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களும் பொறுப்புடைய மற்றும் நம்பத்தகுந்த பதிலுரைகள் வழங்க வேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.
தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இத்திங்களன்று துவங்கியுள்ள ஐநா கருத்தரங்கில் அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள், மக்கள் நலம் விரும்பிகள் என 25, 000 பேர் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.