2011-11-25 15:13:07

இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாதென்று பாகிஸ்தான் அரசு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதற்கு லாகூர் பேராயர் வரவேற்பு


நவ.25,2011. செல்லிடப் பேசிகளின் குறுஞ்செய்திகளில் இயேசு கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்தப்படக் கூடாதென்று பாகிஸ்தான் அரசு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதை வரவேற்கிறோம் என்று லாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா கூறினார்.
தலத்திருச்சபை அதிகாரிகள், குருக்கள், கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் மற்றும் சில இஸ்லாமியத் தலைவர்கள் அனைவரும் தெரிவித்த எதிர்ப்புக்களால் அரசு இந்த முடிவை இப்புதனன்று அறிவித்தது.
மும்பையில் செயல்படும் கத்தோலிக்க அவை ஒன்றும் பாகிஸ்தான் அரசின் இந்த தடை உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் தொடர்பு சாதன அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாக UCAN செய்தியொன்று கூறியுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பெயரை தகாத வார்த்தைகளின் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்க்க முயன்ற இதுபோன்ற தவறான முடிவுகளை இனியும் இந்த அரசு எடுக்காமல் இருக்க வேண்டும் என்று அனைத்து மதங்களின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பை நடத்தி வரும் அருள்தந்தை ஜேம்ஸ் சன்னன் கூறினார்.
அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மதங்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் அரசு இன்னும் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது நாட்டிற்கு நல்லது என்று அருள்தந்தை சன்னன் மேலும் கூறினார்.
குறுஞ்செய்திகள் பரிமாற்றத்தில் பாகிஸ்தான் உலகில் 5வது இடத்தில் உள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் அந்நாட்டில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை 80 கோடி என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.