கலவரங்களும், மரணமும் கிறிஸ்துவர்களை மனம் தளரச் செய்யாது - இந்திய
ஆயர் பேரவையின் தலைவர்
நவ.24,2011. அன்பு, நீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் கிறிஸ்துவர்கள் எப்போதும்
அர்ப்பணத்துடன் செயல்படுவர் என்றும், கலவரங்களும், மரணமும் அவர்களை மனம் தளரச் செய்யாது
என்றும் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார். நவம்பர் 15ம் தேதி கொல்லப்பட்ட அருள்சகோதரி
வல்சா ஜான் அவர்களின் வீர மரணம் குறித்துப் பேசிய கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் இவ்வாறு
கூறினார். கேரளாவின் கொச்சியில் இவ்வியாழன் ஆரம்பாமாகியிருக்கும் இந்திய கத்தோலிக்க
அவையின் 11வது பொதுக்குழு கூட்டத்திற்காக அங்கு சென்ற கர்தினால் கிரேசியஸ், நற்செய்தி
படிப்பினைகளை எடுத்துச் சொல்வதற்கு எதிராக எழும் எந்த ஒரு சவாலையும் திருச்சபை சந்திக்கும்
என்று கூறினார். இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மதம், மொழி, சாதி என்ற
பாகுபாடுகள் இல்லாமல் ஏழைகள், மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டோர் ஆகியோரின் நல்வாழ்வுக்காகவும்
கத்தோலிக்கத் திருச்சபை தளராமல் உழைத்து வரும் என்று உறுதி கூறினார் கர்தினால் கிரேசியஸ்.