தென்கொரிய அரசு அமெரிக்க அரசுடன் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு
கிறிஸ்தவ அமைப்புக்கள் எதிர்ப்பு
நவ.23,2011. தென்கொரிய அரசு அமெரிக்க அரசுடன் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தகம்
என்ற ஒப்பந்தத்தை எதிர்த்து, அந்நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபை உட்பட, அனைத்து கிறிஸ்தவ
அமைப்புக்களும் குரல் கொடுத்துள்ளன. கட்டுப்பாடற்ற வர்த்தகம் குறித்து அரசு மக்களிடையே
மேற்கொண்ட கருத்தெடுப்பில் கூறப்பட்டிருந்த பெருவாரியான எண்ணங்களுக்கு எதிராக அரசு இந்த
முடிவை இரகசியமாக மேற்கொண்டதை எதிர்த்து, கிறிஸ்தவ அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பை இப்புதனன்று
வெளியிட்டனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் உள்நாட்டு வர்த்தகத்தை, முக்கியமாக, சிறு வர்த்தகங்களை
முற்றிலும் அழித்து விடும் என்றும், நாட்டை இவ்விதம் காட்டிக் கொடுத்துள்ள இந்த அரசை
வருகிறத் தேர்தலில் மீண்டும் பதவியில் அமர்த்தாமல் இருப்பது மக்களின் கடமை என்றும் Seoul
உயர்மறைமாவட்ட மெய்ப்புப் பணி அவையின் கல்வித் துறை இயக்குனர் Augustine Maeng Joo-hyung
கூறினார். 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர்
மாதம் அமெரிக்க ஐக்கிய நாடு கையொப்பமிட்டது. இச்செவ்வாயன்று தென் கொரிய அரசு கையொப்பமிட்டது.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று UCAN
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.