மீன்பிடித் தொழிலாளர் நாளுக்கென திருப்பீட அவை வெளிட்டுள்ள செய்தி
நவ.21,2011. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் கவலைக்குரிய கடல் பயணத்தில் அவர்களுக்கு
ஒரு கலங்கரை விளக்காகவும், நங்கூரமாகவும் திருச்சபை செயல்பட்டு வருகிறது என்று திருப்பீட
அதிகாரி ஒருவர் கூறினார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வை மக்களுக்கு
நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 21ம் தேதி உலக மீன்பிடித் தொழிலாளர்
நாள் கடைபிடிக்கப்படுகின்றது. இத்திங்களன்று கடைபிடிக்கப்படும் இந்நாளையொட்டி, குடியேற்றதாரர்களுக்கென
உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò
வெளியிட்டச் செய்தியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் வழியாக உலகம் பெறும் நன்மைகளைச்
சுட்டிக் காட்டியுள்ளார். குடும்பத்தையும், வீடுகளையும் விட்டு நாட்கள், அல்லது மாதக்கணக்கில்
கடலிலேயே வாழும் இந்தத் தொழிலாளிகள் இயற்கையின் கருணையால் வாழும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்
என்று பேராயர் Vegliò தன் செய்தியில் கூறியுள்ளார். இந்த நாளில் கடல் சார்ந்த பணிகளில்
ஈடுபட்டுள்ள பல உலக அமைப்புக்களும் நிறுவனங்களும் இத்தொழிலாளிகளின் குறைகளை நிறைவு செய்து,
அவர்கள் வாழ்வுக்கு பாதுகாப்பையும், அவர்கள் குடும்பங்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும்
உருவாக்கும் கடமை உள்ளதென்று பேராயர் Vegliò தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.