நவ 21, 2011. மீனவர் வாழ்வு மேம்பட, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்துலக
மீனவர் தினத்தையொட்டி அகில இந்திய மீனவர் சங்கம் கோரியுள்ளது. தமிழகத்தின் 1,076
கிலோ மீட்டர் நீள கடற்கரையில் உள்ள 596 மீனவ கிராமங்களில் வாழும் 30 லட்சம் மீன்பிடித்
தொழிலாளர்களின் சார்பாகப் பேசிய அகில இந்திய மீனவர் சங்க செய்தித் தொடர்பாளர் நாஞ்சில்
ரவி, மீனவர்களை வாழ வைக்கும் கடற்கரை மாசுபட்டுள்ளதால், கடற்கரையில் இருந்து 12 கிலோ
மீட்டர் தூரம் வரை மீன்கள் கிடைக்காத நிலையில், மீன்களைத் தேடி அலையும் போது, கடல் எல்லையைத்
தாண்டி பாதிக்கப்படுகின்றனர் என்றார். இந்த நிலையை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து,
மீனவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் நாஞ்சில்
ரவி.