2011-11-19 15:07:55

திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருப்பயணம்பெனின் நாட்டில் திருத்தந்தை 2ம் நாள் நிகழ்வுகள்


நவ.19,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின் நாட்டுக்கு மூன்று நாள் திருப்பயணமாக இவ்வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அந்நாடு சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆன்மீக மற்றும் ஒழுக்கநெறி அழிவுகளின் மத்தியில் ஆப்ரிக்கக் கண்டம் தனது தொன்மைமிகு விழுமியங்களைப் பாதுகாக்குமாறு அழைப்பு விடுத்தார். உரோமையிலிருந்து பெனின் நாட்டுக்குச் சென்ற ஆறுமணி நேர விமானப் பயணத்தில் நிருபர் சந்திப்பையும் நடத்தினார். ஆப்ரிக்கக் கண்டத்தில் திருச்சபையின் எதிர்காலம் குறித்த அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுவதற்கு பெனின் நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தை முதலில் விளக்கினார். பெனின், அமைதியிலும் சனநாயகத்திலும் எனப் பல வகைகளில் மற்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இந்நாட்டில் பல்வேறு மதங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்கின்றன என்றார். விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது நிருபர்களுக்குப் பதில் அளித்துக் கொண்டு சென்ற திருத்தந்தை, ஆப்ரிக்கா வெறும் பிரச்சனைகளின் கண்டமாக மட்டும் நோக்கப்படக் கூடாது. ஆப்ரிக்காவின் பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. ஆயினும் அக்கண்டத்தில் வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கும் புத்துணர்வு இருக்கிறது, நம்பிக்கை நிறைந்த இளமைத்துவம் இருக்கின்றது, அத்துடன் நகைச்சுவை உணர்வும் மகிழ்ச்சி உணர்வும் இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் கடவுள் பிரசன்னமாய் இருக்கிறார் என்ற ஒரு விழிப்புணர்வு இன்னும் ஆப்ரிக்கர்களிடம் இருக்கின்றது என்றார்.
53 நாடுகளைக் கொண்ட ஆப்ரிக்கக் கண்டத்தில் அமைதி நிலவும் இந்த பெனின் நாட்டில் கத்தோலிக்கர் குறைவாக இருந்தாலும் பல மதத்தலைவர்களும் திருத்தந்தைக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இப்பயணத்தின் முதல் நாள் மாலை 4.30 மணிக்கு இந்நாட்டின் மிகப் பெரிய நகரமான கொட்டுன்னு நகரின் இரக்கமுள்ள அன்னைமரியா பேராலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு சிறிது நேரம் திருநற்கருணையின் முன்பாகச் செபித்த அவர், அப்பேராலயத்திலுள்ள கொட்டுன்னு உயர்மறைமாவட்ட முன்னாள் இரண்டு பேராயர்கள் கிறிஸ்டோப், இசிதோர் ஆகியோரின் கல்லறைகள் முன்பாகவும் செபித்தார்.
அப்பேராலயத்தில் ஆற்றிய மறையுரையில், அன்னைமரியா வழியாக இயேசுவைத் தேடுமாறு கேட்டுக் கொண்டார். அங்குப் பாடப்பட்ட “தே தேயும்” என்ற பழமையான நன்றிப் பாடலைச் சொல்லித் தனது மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை. தன் மறையுரைக்குப்பின் அனைவரையும் ஆசீர்வதித்து அங்கிருந்து திறந்த காரில் கொட்டுன்னு திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இரண்டாம் நாள்

ஒப்புரவு, நீதி, அமைதி என்ற தலைப்பில் இடம் பெற்று வரும் திருத்தந்தையின் இந்தப் பெனின் நாட்டுத் திருப்பயணத்தின் இரண்டாவது நாளான இச்சனிக்கிழமை காலை கொட்டுன்னு திருப்பீடத் தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் காலை 8.45 மணிக்கு கொட்டுன்னு அரசுத்தலைவர் மாளிகை சென்றார். அங்கு பெனின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். முதலில் அரசுத்தலைவர் தாமஸ் Yayi Boni யும் பெனின் தேசிய அவையின் தலைவர் Koubourath Osséni யும் உரையாற்றினர். திருத்தந்தை, ஆப்ரிக்காவின் மற்றும் ஆப்ரிக்கர்களின் உண்மையான நண்பர், இதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம் என்றார் Koubourath Osséni.
பின்னர் திருத்தந்தை ஆற்றிய உரையில் ஆப்ரிக்காவின் தற்போதைய இரண்டு விவகாரங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகத் தெரிவித்தார். ஒன்று ஆப்ரிக்காவின் சமூக-அரசியல் - பொருளாதாரம். இரண்டு பல்சமய உரையாடல்.
தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை, அம்மாளிகையில் அரசுத்தலைவர் தாமஸ் யாயி போனியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். பின்னர் கொட்டுன்னுவிலிருந்து 43 கிலோ மீட்டரிலிருக்கின்ற குய்தா சென்றார் திருத்தந்தை. கடற்கரை நகரமான குய்தா புனித Gall குருத்துவக் கல்லூரியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கர்தினால் Bernardin Gantin கல்லறையில் செபித்தார். பெனின் நாட்டவரால் மிகவும் மதிக்கப்படும் இக்கர்தினால் திருப்பீடத்தில் கர்தினால்கள் அவையின் தலைவராகவும் ஆயர் திருப்பேராயத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு மிகவும் நெருக்கமானவர்.
புனித Gall குருத்துவக் கல்லூரியில் குருக்கள், குருத்துவ மாணவர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினரைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது உள்ளூர் நேரம் பகல் 11 மணி 25 நிமிடங்களாகும். இந்திய நேரம் மாலை 3 மணி 55 நிமிடங்களாகும். குருக்கள் உருவாக்கத்திற்குப் பொறுப்பான ஆயர் பாஸ்கால் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் குய்தா அமலமரி பசிலிக்காவுக்குத் திறந்த காரில் சென்றார். ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பான Africae munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்காக அப்பசிலிக்கா சென்றார் திருத்தந்தை. பெனின் நாட்டுக்கான இத்திருப்பயணத்தின் நோக்கமே இவ்வேட்டில் கையெழுத்திட்டு அதனை வெளியிடுவதாகும். இந்த நிகழ்ச்சியில் அரசுத்தலைவர், அவரது மனைவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முதலில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் முன்னுரை வழங்கினார். பின்னர் திருத்தந்தையும் உரை வழங்கினார்.
Africae munus எனப்படும் “ஆப்ரிக்காவின் அர்ப்பணம்” என்ற அப்போஸ்தலிக்க ஏடு, 2009ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் அந்த ஆயர்கள் முன்வைத்த 57 பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதாகும். இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஏட்டின் முதல் பாகம், நீதி, அமைதி மற்றும் ஒப்புரவுப் பணியில், சிறப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியின் வழியாக அப்பணியில் திருச்சபையின் அடிப்படை அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், கல்வி, நலவாழ்வு மற்றும் சமூகத் தொடர்புச் சாதனங்கள் வழியாகச் சமுதாயத்துக்குத் திருச்சபை ஆற்றும் பணிகளைக் கொண்டுள்ளது. திருமறை நூல்களை வாசித்துச் செபித்தல், ஆப்ரிக்கக் கண்ட திருநற்கருணை மாநாடு, தலத்திருச்சபைகளிலிருந்து புதிய புனிதர்கள், ஒப்புரவு நாட்களை, ஒப்புரவு வாரங்களை, குறிப்பாக திருவருகை காலம் மற்றும் தவக்காலங்களில் ஊக்குவிப்பது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஏடானது, பல்சமய உரையாடலையும் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது. பகைவர்களை அன்பு செய்ய அழைக்கும் இயேசுவின் குரலைக் கேட்க வேண்டிய தேவை ஆப்ரிக்காவுக்கு உள்ளது என்று சொல்லிக் கடவுளோடும் அயலாரோடும் சமாதானமாக வாழ இது அழைப்பு விடுக்கிறது. மரபுவழி நடைமுறைப் பழக்கங்களில் தேர்ந்து தெளியவும் குடும்பம், பெண்கள், சிறார், மனித வாழ்வு ஆகியோர் பாதுகாக்கப்படவும் கேட்டுள்ளது. எழுத்தறிவின்மை களையப்படவும் வலியுறுத்துகிறது இவ்வேடு. நியாயமான சுதந்திரமானப் பொதுத் தேர்தல்களுக்கும், சுயேட்சையாக நடைபெறும் நீதித்துறைக்கும் ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்துக்கும் இவ்வேடு அழைப்பு விடுக்கிறது. இயற்கை வளங்கள் சமமாகவும் சரியாகவும் கையாளப்பட வேண்டும் என்று கூறும் இவ்வேடு, அவ்வளங்கள் அநீதியாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது. திருச்சபை தனது நற்பணிகள் மூலம் கிறிஸ்துவுக்கு உண்மையான சான்று பகரத் தனது அர்ப்பணத்தைப் புதுப்பிக்கிறது என்றும் இந்த அப்போஸ்தலிக்க ஏடு கூறுகிறது. திருச்சபையில் ஒவ்வொரு நிலையில் இருப்பவர்களுக்கும் ஒருங்கிணைந்த தொடர் விசுவாசப் பயிற்சி தேவை எனவும் சுட்டிக் காட்டுகிறது இவ்வேடு.
இந்த அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து அனைவரையும் ஆசீர்வதித்து கொட்டுன்னு திருப்பீடத் தூதகத்திற்குப் புறப்பட்டார் திருத்தந்தை. அங்கு பகல் 1.30 மணியளவில் மதிய உணவருந்தினார். இச்சனிக்கிழமை மாலையில் பிறரன்பு மறைபோதகர்கள், சிறார், ஆயர்கள் ஆகிய மூன்று குழுவினரைத் சந்திப்பது பயணத் திட்டத்தில் உள்ளது. பெனின் நாட்டுக்கான இந்த மூன்று நாள் திருப்பயணத்தை நிறைவு செய்து இஞ்ஞாயிறு இரவு உரோம் திரும்புவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.