கேரளாவில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் செய்யும் திட்டம்
நவ.16,2011. நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு
திட்டத்தை சீரோ மலபார் உயர் பேராயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி அண்மையில் துவக்கி வைத்தார். ‘Jeevasamridhi’
என்று வழங்கப்படும் இந்தத் திட்டம் கேரளாவின் சட்டசபையில் விவாதத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள
கேரளா பெண்கள் வழிமுறை 2011 (Kerala Women’s Code Bill 2011) என்ற ஒரு சட்ட வரைவுக்கு
ஒரு மாற்றாகக் கருதப்படுகிறது. கேரள அரசின் இந்தச் சட்ட வரைவின்படி, இரு குழந்தைகளுக்கு
மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதியர் மீது 10000 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும்
சுமத்தப்பட்டுள்ளது. மக்களின் மனசாட்சி சுதந்திரத்தைக் கட்டிப் போடும் வண்ணம் இந்தச்
சட்ட வரைவு அமைந்துள்ளது என்பதே திருச்சபையின் கருத்து என்று சீரோ மலபார் ஆயர் பேரவையின்
சார்பில் பேசிய அருள்தந்தை பால் தெலக்கத் கூறினார்.