அகில உலகத் திருச்சபையின் எதிர்காலத்திற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டை திருத்தந்தை நம்பிக்கையுடன்
நோக்குகிறார் - திருப்பீடத் தூதர்
நவ.16,2011. அமெரிக்க ஐக்கிய நாடு பல்வேறு பிரச்சனைகளில் சிக்குண்டிருந்தாலும், அகில
உலகத் திருச்சபையின் எதிர்காலத்திற்கு இந்த நாட்டைத் திருத்தந்தை நம்பிக்கையுடன் நோக்குகிறார்
என்று திருப்பீடத்தின் தூதர் கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதராக
அண்மையில் பொறுப்பேற்ற பேராயர் Carlo Maria Viganò அமெரிக்க ஆயர்கள் பேரவையை இத்திங்களன்று
முதன் முதலாகச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அமெரிக்க சமுதாயம் உருவாவதில்
திருச்சபையின் பங்கு பெரிதும் இருந்தது என்பதையும், 'கடவுளில் நம்பிக்கை கொள்வோம்' என்பது
இந்நாட்டின் மையமான ஓர் எண்ணமாக இன்றும் இருப்பதையும் திருப்பீடத் தூதர் தன் உரையில்
சுட்டிக் காட்டினார். திருத்தந்தை அண்மையில் 2012ம் ஆண்டை விசுவாச ஆண்டென அறிவித்துள்ளதை
சுட்டிக்காட்டி, அமெரிக்க ஆயர்கள் அனைவரும் இந்நாட்டின் விசுவாசத்தை இன்னும் வளர்க்கும்
பல வழிகளில் மக்களை வழி நடத்த வேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Viganò ஆயர்களுக்கு
அழைப்பு விடுத்தார்.