வெப்பநிலை மாற்றத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் இலட்சக்கணக்கான சிறாரின்
வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடையும் : ஐ.நா. எச்சரிக்கை
நவ.15,2011. இப்புவியின் வெப்பநிலை மாற்றத்தால் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில்
இலட்சக்கணக்கான சிறாரின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடையும் என்று ஐ.நா.வெளியிட்ட ஓர்
அறிக்கை எச்சரித்துள்ளது. இந்தோனேசியா, மங்கோலியா, கிரிபாட்டி, பிலிப்பீன்ஸ், வனுவாட்டு
ஆகிய ஐந்து நாடுகளில் யுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு
தெரிய வந்துள்ளது. உலகில் அதிகரித்து வரும் வெப்பத்தினால் காலரா, மலேரியா போன்ற நோய்களாலும்
இயற்கைப் பேரிடர்களாலும் சிறாரின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் என்று, யுனிசெப் அமைப்பின்
பசிபிக் பிரதிநிதி Isiye Ndombi கூறினார். இந்தோனேசியா, மங்கோலியா மற்றும் பசிபிக்
பகுதியில் மக்களின் வாழ்க்கை ஆதாரங்களில் 50 விழுக்காடு வேளாண்மையைச் சார்ந்து இருப்பதால்
வெப்பநிலை மாற்றம் சிறாரை அதிகம் பாதிக்கின்றது என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.