iPadஐப் பயன்படுத்தி உலகின் மிக உயரமான எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ்
மரத்தை ஒளியேற்றுவார் திருத்தந்தை
நவ.15,2011. உலகின் மிக உயரமான எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரத்தை புதிய iPad கணனி தொழிற்நுட்பத்தைப்
பயன்படுத்தி வத்திக்கானில் தனது அறையில் இருந்து கொண்டே ஒளியேற்றி வைப்பார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் உதவியினால் ஒளி-ஒலி காட்சி மூலம்
முதலில் செய்தி வழங்கிய பின்னர் இந்தக் கிறிஸ்துமஸ் மரத்திற்குத் திருத்தந்தை ஒளியேற்றுவார்
என்று இத்தாலியின் Gubbio நகரமும் Gubbio மறைமாவட்டமும் அறிவித்தன. டிசம்பர் 7ம்
தேதி மாலை இந்நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gubbio நகருக்கு அருகிலுள்ள
Igino மலைக்கு முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரானிக் கிறிஸ்துமஸ் மரம்,
இரண்டாயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்டுள்ளது. இதற்கு 25 ஆயிரம் அடிக்கு அதிகமான
மின்சாரக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1981ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மரம், 1991ம்
ஆண்டில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்று அங்கீகரிக்கப்பட்டு உலகக் கின்னஸ்
சாதனையிலும் பதிவாகியுள்ளது.