திருத்தந்தையின் மெக்சிகோ, கியுபத் திருப்பயணம் குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி
நவ.11,2011. 2012ம் ஆண்டின் வசந்த காலத்தில் மெக்சிகோ மற்றும் கியுபாவுக்குத் திருத்தந்தை
திருப்பயணம் மேற்கொள்வது குறித்து திருப்பீட அதிகாரிகள் தீவிரமாய்ப் பரிசீலித்து வருவது
பற்றிய அறிவிப்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவ்விரு நாடுகளின் ஆயர்கள்
கூறியுள்ளனர். அனைத்து கியுப மக்களுக்கும் தாயாக விளங்கும் பிறரன்பு அன்னைமரியின்
கொடையாக இச்செய்தியைத் தாங்கள் பெற்றதாக கியுப ஆயர்களின் அறிக்கை கூறுகிறது. கோப்ரே
தேசிய அன்னைமரி திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ள பிறரன்பு அன்னைமரி திருவுருவப் படம் கண்டெடுக்கப்பட்டதன்
400ம் ஆண்டு விழாவில் திருத்தந்தை கலந்து கொள்வதாய், அவரின் கியுபத் திருப்பயணம் அமையும்
என்றும் கியுப ஆயர்கள் கூறினர். மேலும், திருத்தந்தை மெக்சிகோவிற்குத் திருப்பயணம்
மேற்கொள்வது தங்களது நீண்டகால ஆவலை நிறைவேற்றுவதாக இருக்கின்றது என்று மெக்சிகோ ஆயர்கள்
கூறியுள்ளனர்.