மறைமாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டங்களில் முன்னிலை வகிக்க
வேண்டாம் - தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ்
நவ.09,2011. தமிழ் நாட்டின் தூத்துக்குடி மறை மாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய
எதிர்ப்பு போராட்டங்களில் முன்னிலை வகிக்க வேண்டாமென்றும், மக்களுக்குத் தங்கள் ஆதரவைப்
பிற வழிகளில் வெளிப்படுத்தலாம் என்றும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ்
கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடையும்
நிலையில் அப்பகுதி மக்கள் பல வாரங்களாக மேற்கொண்டிருக்கும் போராட்டத்தால் இந்த அணு மின்
நிலையம் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் செயல்படுவதில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்தக்
குழப்பத்தை ஓரளவு தீர்க்கும் நோக்கத்தில் ஆயர் தன் குருக்களுக்கு இந்த அறிக்கையை விடுத்திருக்கலாம்
என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள்
விடாப்பிடியான நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்திருப்பதாகவும், இந்த அணு மின் நிலையம்
குறித்த அனைத்து விவரங்களும் மக்களுக்கு ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் ஒரு வெள்ளை
அறிக்கையை போராட்டக் குழுவினர் கேட்டு வருவதாகவும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.