2011-11-09 13:54:11

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


நவ 09, 2011. தமிழகம் உட்பட உலகின் பல பகுதிகளும் அண்மை மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இத்தாலி நாடும் விதி விலக்கல்ல. கடந்த பல நாட்களாக தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்த வானம் ஆச்சரியப்படும் விதமாக, இப்புதனன்று தன் சூரியக்கதிர்களை வெளிக்கொணர்ந்து உரோம் நகரை ஒளிமயமாக்க, திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் தூய இராயப்பர் பேராலய வளாகத்தில் இடம்பெற்றது.
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்வி போதனையில் இன்று, இறைச்சட்டத்தைக் கொண்டாடும் திருப்பாடல் 119 குறித்து காண்போம் என தன் உரையைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்தத் திருப்பாடலின் 22 சரணங்களிலும், ஒளியையும் வாழ்வையும், மீட்பையும் கொணரும் இறைச்சட்டத்தின் மீது தான் கொண்டிருக்கும் அன்பை அறிக்கையிடுகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
இறைவார்த்தைக்கு மனதை திறந்த நிலையில், இறைவனைப் புகழ்ந்து, அவருக்கு நன்றி கூறி, அவரில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அவரை வேண்டி மற்றும் பாவங்களுக்காக வருந்தி செபிக்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் நிறைத்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இத்திருப்பாடல் உள்ளது. இறை விருப்பத்திற்கு அன்புடன் பணிந்து செயல்படுவதன் முன்மாதிரிகையான அன்னை மரியையும், சட்டத்தின் முழுநிறைவான இயேசுவையும், இத்திருப்பாடலைச் செபிக்கும்போது கிறிஸ்தவர்கள் காண்கின்றனர். 'ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு' என திருப்பாடல் ஆசிரியர் கூறும் வார்த்தைகள், அவரின் பக்திக்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாக உள்ளன. நாம் சிறப்பான விதத்தில் இந்த வார்த்தைகளை குருக்களுக்கு பயன்படுத்தலாம். இறைவனுக்கும் இறையரசுக்கும் முழுபக்தியுடன் செயல்படுவதற்கு இவர்கள் பெற்றுள்ள அழைப்புக்கு இவர்களின் கற்பு வாழ்வு சான்று பகர்கின்றது. அதே வேளை, கிறிஸ்துவின் அரசக் குருத்துவத்தில் பங்குபெறும், மற்றும், நற்செய்திக்கு சான்று பகர தினமும் அழைப்புப் பெறும் அனைத்து விசுவாசிகளுக்கும் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படலாம். இறைவன் மீது நாம் கொள்ளும் ஆழமான அன்பை அவரே நமக்கு வழங்குவாராக, அதன்வழி, நாமும் திருப்பாடல் ஆசிரியரைப்போல், இறைனின் வார்த்தைகளை நம் பாதங்களின் விளக்காகவும், பாதையின் ஒளியாகவும் கொள்வோமாக.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அண்மை நாட்களில் உலகின் பல பகுதிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்டார். இலத்தீன் அமெரிக்கா, குறிப்பாக அதன் மத்திய பகுதி முதல், தென்கிழக்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகள் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டு பலரின் உயிரிழப்புகளுக்கும், உடமை இழப்புகளுக்கும் காரணமாகியுள்ளன. பாதிப்புக்குள்ளாகியுள்ளோருடன் என் அருகாமையை வெளிப்படுத்தும் இவ்வேளையில், இவர்களுக்கான அனைவரின் செபங்களுக்கும் விண்ணப்பிக்கின்றேன் என்ற திருத்தந்தை, நல்மனமுடைய அனைவரும் தாராள மனதுடன் இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.