கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு வசதிகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்
கலாம் திருப்தி
நவ.09,2011. கூடங்குளம் அணுமின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது,
இது தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்
அப்துல் கலாம் கூறியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை,
தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில்
அப்துல் கலாம் அண்மையில் அங்கு சென்று அணுசக்தி துறை மற்றும் மின்நிலைய அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார். பின்னர் அணுமின் திட்டத்தினை ஆதரிக்கும் கிராம மக்கள் சிலரையும் நிலைய
வளாகத்திலேயே சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் கலாம்,
அணுமின் நிலையம் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அணு
உலை வெடித்தாலுங்கூட கதிர்வீச்சு வெளியாகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும்
கலாம் தெரிவித்தார். கழிவு எதுவும் கடலில் கலக்காது எனவும் உறுதியளித்தார் கலாம். ஆனால்
போராடும் மக்க்ள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது
தான் சமாதானம் செய்துவைக்க வரவில்லையென்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்ததாகவும், இப்போது முழுத்திருப்தியுடன் திரும்புவதாகவும்
கலாம் கூறினார். கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ''அப்துல் கலாமை
சந்திக்கத் தங்களுக்கு அழைப்புவரவில்லை, அது தங்களுக்கு ஏமாற்றமே, எப்படியும் அரசுசார்
அறிவியலாளராகவே கலாம் பேசியிருக்கிறார், தங்களுக்கு அது ஏற்புடையதல்ல'' என்றவர், குறிப்பாக
அணுஉலைக் கழிவுகள் பற்றி குழப்பமான தகவல்கள் வெளிவருவதாகக் கூறினார். ''அணு மின்நிலையம்
குறித்த அனைத்து பிரச்சனைகளையும் நடுநிலையோடு ஆய்ந்து பரிந்துரை செய்ய புதிதாக, முற்றிலும்
சுதந்திரமாக செயல்படக்கூடிய நிபுணர் குழுவேண்டும், அதன் அறிக்கையின் பேரில் மக்கள் முடிவெடுக்கட்டும்,
அதற்குத் தாங்கள் உடன்படத்தயார்'' என்றும் உதயகுமார் மேலும் கூறினார்.