நவ.08,2011. வியட்நாமின் தாய் ஹா பங்குதளமும் அதனருகேயுள்ள துறவு இல்லமும், இராணுவம்
மற்றும் காவல் துறையின் உதவியோடு தாக்கப்பட்டுள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தை
வெளியிட்டுள்ளது அந்நாட்டின் Hanoi உயர் மறைமாவட்டம். கடந்த வியாழனன்று நாய்கள், குண்டர்கள்
மற்றும் அரசு தொலைக்காட்சி குழுவோடு துறவு இல்லத்திற்கு முன் வந்த வியட்நாம் இராணுவமும்
காவல்துறையும், அவ்வில்லத்தின் முன்கதவை உடைத்ததோடு, அங்குள்ள துறவிகளையும் வசை பாடி
தாக்கியுள்ளனர். தாய் ஹா பங்குதளத்தை நடத்தும் இந்தத் துறவு சபைக்குச் சொந்தமான இடத்தை
கைப்பற்ற விரும்பும் அரசின் செயலுக்கு இத்துறவிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இந்த
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அரசுத்துறையின் இத்தாக்குதல் குறித்து
அறிந்து கத்தோலிக்கர்கள் கூடியதைத் தொடர்ந்து, இத்தாக்குதல் கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.