வத்திக்கான் : அமெரிக்காவில் புதிய நற்செய்திப் பணி செய்வதற்கு, குடியேற்றம் சவாலாக இருக்கின்றது
நவ.05,2011. வட மற்றும் தென் அமெரிக்காவில் புதிய நற்செய்திப் பணி செய்வதற்கு, மக்களின்
குடியேற்றம் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கின்றது என்று ஆயர் மாமன்றப் பொதுச்
செயலகம் இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. குடியேற்றதாரர்கள் தங்களின்
கலாச்சாரங்களைத் தாங்கள் குடியேறியுள்ள நாடுகளோடு ஒன்றிணைத்துச் சமூக அமைதியுடன் வாழ்வதற்குத்
திருச்சபை, சமூக மற்றும் சமயம் சார்ந்த உதவிகளைச் செய்து வருகின்றது என்று அவ்வறிக்கை
மேலும் கூறியது. 1997ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற அமெரிக்க சிறப்பு ஆயர் மாமன்றத்
தீர்மானங்கள் எவ்வாறு அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்து கடந்த
மாத இறுதியில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டவைகள் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டு அக்டோபரில் “புதிய நற்செய்திப்பணி” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெறும்
உலக ஆயர் மாமன்றத்தின் முன்வரைவுக்கு உதவியாகவும் இக்கூட்டம் இடம் பெற்றதாக அவ்வறிக்கை
கூறுகின்றது.