திருத்தந்தை 12ம் பத்திநாதர் யூதப் படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றினார், யூத
ஆய்வாளர் நம்பி்க்கை
நவ.05,2011. இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி யூதப்படுகொலையிலிருந்து யூதர்களைக் காப்பாற்றுவதற்கு
திருத்தந்தை 12ம் பத்திநாதர், தானே யூதர்களின் இருப்பிடம் சென்று அவர்களைக் காப்பாற்றியிருப்பதற்குச்
சான்றுகளை வெளியிட்டுள்ளார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர். இரண்டாம் உலகப் போரின் போது
உரோமில் யூதர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து தப்பித்துச் சென்று பின்னர் பாதுகாப்புக்காக
வத்திக்கானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவரின் கடிதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்
Pave the Way Foundation என்ற அமைப்பின் நிறுவனர் Gary Krupp. பின்னாளில் அந்த ஆள்,
திருத்தந்தை 12ம் பத்திநாதரைச் சந்தித்த போது, இவர்தான் ஒரு சாதாரண பிரான்சிஸ்கன் சபை
சகோதரர் போல் உடையணிந்து தன்னை வத்திக்கானுக்கு அழைத்து வந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டதாக
அக்கடிதம் கூறுவதாக Krupp கூறினார். கத்தோலிக்கருக்கும் யூதருக்கும் இடையே புரிந்து
கொள்ளுதலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2002ம் ஆண்டு Pave the Way Foundation என்ற அமைப்பை
ஏற்படுத்தினார் Krupp. திருத்தந்தை 12ம் பத்திநாதர் நாத்சி ஆட்சிமுறையை அதிகமாக எதிர்த்தார்,
இவர் உரோம் நகருக்குள் அடிக்கடிச் சென்று போரின் சேதங்களைப் பார்த்தார், உரோமில் யூதர்களின்
குடியிருப்புகளுக்குச் சென்று அவர்களைக் காப்பாற்றினார் என்பன போன்ற இத்திருத்தந்தையின்
செயல்பாடுகளில் தான் உறுதியாக இருப்பதாக Krupp கூறுகிறார்.