நவ.02,2011. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அண்மையில் கூடிய காமன்வெல்த் (Commonwealth)
நாடுகளின் தலைவர்கள், இளம்பிள்ளைவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கான உறுதியை மீண்டும் பூண்டிருக்கிறார்கள்.
இந்த நோய்க்கெதிரான தீவிர நடவடிக்கைகளுக்காக 5 கோடி டாலர்களை வழங்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது. உலகிலேயே
இன்னும் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 நாடுகளில் மட்டுமே
இந்த இளம்பிள்ளைவாத நோய் தற்போது தாக்கிவருவதாகவும், மற்றபடி உலகில் 99 விழுக்காடு இந்த
நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோயை அடுத்து வருகின்ற 2 வருடங்களுக்குள்
முற்றாக அழிப்பது என்பது உலகின் கரங்களிலேயே இருக்கிறது என்று பிரித்தானியப் பிரதமர்
டேவிட் காமரோன் கூறினார். நடக்க முடியாமல் முடங்கியிருக்கக்கூடிய 80 லட்சம் பேர் இளம்பிள்ளைவாத
நோய்த்தடுப்பு மருந்து காரணமாக இன்று உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்
குறிப்பிட்டார். இளம்பிள்ளைவாதத்தை ஒழிப்பதற்கான உலக முயற்சி என்பது 1988 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
காமன்வெல்த் நாடுகள் ஐ.நா. போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சரியாகச் செயற்பட்டால் 2013ம்
ஆண்டிற்குள் உலகில் இளம்பிள்ளைவாதத்தை முற்றாக ஒழித்துவிடலாம் என்று நம்பப்படுகிறது.