நவம்பர் 02, வாழ்ந்தவர் வழியில்... இறந்தோர் அனைவரின் நினைவு நாள்
கல்லறைத் திருநாள், சகல ஆன்மாக்களின் திருநாள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்நாள் நவம்பர்
2ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு தனி சிறப்புள்ள
நாள். இறந்தோர் அனைவரின் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதியை 'வாழ்ந்தவர் வழியில்' பகுதியில்
சிந்திப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. இறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வாழ்வதாக
பல உலக மதங்களில் சொல்லப்பட்டுள்ளது. வாழ்ந்து மறைந்தவர்களுடன் நாம் மனதால், எண்ணங்களால்
கொள்ளும் உறவு, வாழும் நமக்குப் பயன்தர வேண்டும். உடலளவில் நம்மைவிட்டுப் பிரிந்து
போயிருக்கும் பல அன்பர்கள், நம் வாழ்வில் தாக்கங்களை விட்டுச் சென்றுள்ளனர். நம் இதயம்
என்ற கடற்கரையில் இவர்கள் விட்டுச்சென்றுள்ள எண்ணத்தடங்கள், உணர்வுத்தடங்கள் இன்னும்
அழியாமல் இருக்கலாம். இந்தத் தடங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வதற்கு, இத்தடங்களில்
நாம் கால்பதித்து நடப்பதற்கு, நவம்பர் 2ம் தேதி நல்லதொரு வாய்ப்பைத் தருகிறது. "இறைவா,
உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதே அன்றி, அழிக்கப்படுவதில்லை. இந்த மண்ணக வாழ்வின்
உறைவிடம் அழிந்ததும், விண்ணகத்தில் நிலையான உறைவிடம் ஒன்றை இவர்களுக்கு வழங்கியருளும்."