பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'
அக்.28,2011. வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை தமிழகத்தில் ஒரு கிராம மக்கள்
கொண்டாடினர். புதுச்சேரிக்கு அருகில், தமிழகப் பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம்
கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை. கழுப்பெரும்பாக்கம்
ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்தின்னும் வவ்வால்களே கிராம மக்களின்
இந்த தியாகத்திற்குக் காரணம். பழந்தின்னும் இந்த வவ்வல்களுக்காக கடந்த 5 தலைமுறையாக
இந்த ஊர் மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல், சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி
வருகின்றனர். மேலும், இந்த ஊரில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என கொண்டாடப்படும்
பொதுவான நிகழ்ச்சிகளிலும், வெடி சத்தமும், புகை, நெடி ஆகியவைகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக
தங்கள் ஊரை இவர்கள் கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர். வழக்கம்போல, இவ்வாண்டும் தீபாவளி
விழாவின்போது இந்த ஊர் மக்கள் பட்டாசுக்களை வெடிக்காமல், மற்றப்படி இனிப்புகள், புத்தாடைகள்
ஆகியவற்றுடன் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர்.