புது டில்லியில் நிறுவப்படவிருக்கும் கிறிஸ்தவக் கலாச்சார மையம்
அக்.27,2011. கிறிஸ்தவக் கலாச்சார மையம் ஒன்று புது டில்லியில் விரைவில் நிறுவப்படும்
என்று டில்லி சிறுபான்மையினர் கழகம் அறிவித்துள்ளது. கிறிஸ்தவ மறை, கலாச்சாரம் இவைகளை
மையப்படுத்திய ஒரு மையமும், ஒரு நிரந்தர கண்காட்சியும் புது டில்லியில் நிறுவப்படும்
என்று சிறுபான்மையினர் கழகத்தின் உறுப்பினர் A.C. மைக்கில் கூறினார். 25 கோடி ரூபாய்
மதிப்பில் கட்டப்படவிருக்கும் இந்த மையத்தின் திட்டங்களை புது டில்லி முதலமைச்சர் ஷீலா
திக்ஷித்திடம் அளித்துள்ளதாகவும், இத்திட்டங்களை அவர் வரவேற்றுள்ளதாகவும் மைக்கில் மேலும்
கூறினார். பல ஆண்டுகளாய் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும், புது டில்லி மறை மாவட்டமும்
இந்த மையத்தை அமைக்கும் விருப்பத்தைத் தெரிவித்து வந்துள்ளன என்று கூறப்படுகிறது. 10
ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த மையத்தில் கிறிஸ்துவின் வாழ்வை விளக்கும்
ஒரு கண்காட்சி, நூலகம், நினைவுப் பரிசுகள் கொண்ட வர்த்தக மையம், மற்றும் திறந்த வெளி
அரங்கம் ஆகியவை உட்பட பல அம்சங்கள் காணப்படும் என்று இம்மையத்தை வடிவமைக்கும் நிபுணர்
இரஞ்சித் ஜான் கூறினார். Jatin Das உட்பட பல சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்படும் ஓவியங்கள்,
சிலைகள் இந்த நிரந்தரக் கண்காட்சியில் இடம் பெறும் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.