அசிசி நகரில் வீசும் அமைதித் தென்றல் பாகிஸ்தானிலும் வீச வேண்டும் - பாகிஸ்தான் சிறுபான்மைத்
துறை சிறப்பு ஆலோசகர்
அக்.27,2011. அசிசி நகரில் வீசும் அமைதித் தென்றல் பாகிஸ்தானிலும் வீச வேண்டும் என்று
பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Paul Bhatti கூறினார். அசிசி
நகரில் இவ்வியாழன் உலக அமைதி வேண்டி நடைபெற்ற பல் சமய கூட்டத்தில் பாகிஸ்தான் Ulama Mashaikh
அவையின் தலைவர் Allama Zubair Abid கலந்து கொண்டார் என்று FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில்
கூறிய Paul Bhatti, உண்மையான மதத் தலைவர்கள் அனைவருமே அமைதியை மட்டுமே நாடுவர் என்று
வலியுறுத்திக் கூறினார். வருகிற 2012ம் ஆண்டு உலகின் பல நாடுகளில் இருந்தும் அழைக்கப்படும்
பிரதிநிதிகள் கொண்ட ஒரு பல் சமய மாநாடு இஸ்லாமாபாதில் நடப்பதற்கான திட்டங்கள் உருவாகி
வருகின்றன என்றும் Paul Bhatti கூறினார். பாகிஸ்தானில் உண்மையான முன்னேற்றம் உருவாக
வேண்டுமெனில், நல் மனம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வழிகளை
ஆராய வேண்டும் என்று பாகிஸ்தான் சிறுபான்மைத் துறை சிறப்பு ஆலோசகர் சுட்டிக் காட்டினார். பாகிஸ்தானில்
சிறுபான்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றி, கொலையுண்ட Shahbaz Bhatti யின் சகோதரர் Paul
Bhatti என்பது குறிப்பிடத் தக்கது.