2011-10-26 16:15:04

உலக அமைதிக்கான அசிசி கூட்டம் குறித்த விவரங்கள்


அக்.26,2011. 'உண்மையின் திருப்பயணம் அமைதியின் திருப்பயணம்' என்ற தலைப்பில் உலக அமைதிக்காக இத்தாலியின் அசிசியில் இடம்பெறும் பல்சமயக் கூட்டம் குறித்த முழு விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
27ம் தேதி வியாழனன்று காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு வத்திக்கான் இரயில் நிலையத்திலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் ஏனைய மதப்பிரதிநிதிகளையும் ஏற்றிச் செல்லும் இரயில், 9.45 மணிக்கு அசிசி நகரை அடைந்த பின், அசிசி குன்றின் அடிவாரத்திலுள்ள சாந்தா மரியா தெல்லி ஆஞ்சலி என்ற பசிலிக்காப் பேராலயத்தில் 10.15லிருந்து 12.30 வரை பல்சமயப் பிரதிநிதிகளின் கூட்டம் திருத்தந்தையின் பங்கேற்புடன் இடம்பெறும்.
மதிய உணவிற்குப்பின் பல்சமயப் பிரதிநிதிகள், தங்கள் அறைகளில் தனிப்பட்ட செபங்களில் ஈடுபட்டிருக்க, சாந்தா மரியா தெல்லி ஆஞ்சலி பசிலிக்காவிலிருந்து இளைஞர்களின் அமைதி நடைபயணம் புனித பிரான்சிஸ் அசிசி பேராலயம் நோக்கி துவங்கும். உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு திருத்தந்தையும் பல்சமயப் பிரதிநிதிகளும் பங்குபெறும் கூட்டமும் அதன் இறுதில் மதப்பிரதிநிதிகள் புனித பிரான்சிசின் கல்லறையைத் தரிசிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறும்.
வியாழன் இரவே சிறப்பு இரயிலில் திருத்தந்தையுடன் உரோம் நகர் வந்தடையும் பல்சமய அங்கத்தினர்களை வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை.
பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே ஏற்பாடுச் செய்யும் மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்வர் இப்பிரதிநிதிகள்.









All the contents on this site are copyrighted ©.