உலகப் பொருளாதர நெருக்கடி குறித்து விவாதிக்கிறது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை
அக்.24,2011. சர்வதேச நிதி அமைப்பில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை. இன்றைய உலகின்
சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மீக பிரச்னைகளை ஆராயும் போது, ஒவ்வொருவரின் ஒன்றிணைந்த
முயற்சிகள் தேவைப்படுவதாக கூறும் இந்த அறிக்கை, எந்த ஒரு நாட்டின் அரசியல் நடவடிக்கையிலும்
தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாத திருச்சபை, மனித குல விவகாரங்களில் தன் ஈடுபாட்டின்
வழி மிக நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது என தெரிவிக்கிறது. நம் சமூக ஒத்திணக்க வாழ்வின்
அடிப்படையாக இருக்கும் கலாச்சார மற்றும் ஒழுக்க ரீதி மதிப்பீடுகளின் ஆழம் குறித்து ஒவ்வொருவரும்
ஆராயவேண்டும் என, இவ்வுலகம் இன்று எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி எதிர்பார்க்கின்றது
என்று இவ்வறிக்கையின் முன்னுரையில் கூறியுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின்
தலவர் கர்தினால் பீட்டர் டர்க்சன். உலகப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் பொறுப்புணர்வின்
மீது கட்டப்பட்டவைகளாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் அவர். 'பொருளாதார
வளர்ச்சியும் இவ்வுலகில் காணப்படும் சரிநிகரற்ற தன்மைகளும்' என்பது குறித்து முதலில்
விவாதிக்கும் இவ்வேடு, பல நாடுகளில் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல்
துன்புறுவதையும், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்குக்
குறைவான வருமானத்தைப் பெற்று அதிலேயே வாழ்க்கையை நகர்த்துவதையும் சுட்டிக்காட்டி கவலையைத்
தெரிவிக்கிறது. இவ்வுலகில் தொழில் நுட்பத்தின் பங்கும் ஒழுக்க ரீதி சவாலும், உண்மையான
உலக அரசியல் அதிகாரம், அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச நிதி
அமைப்புகளை சீர்திருத்துதல் என்ற தலைப்புகளிலும் இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து
விவாதித்துள்ளது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் ஏடு.