2011-10-24 16:11:21

ஆன்மீகப் பாரம்பரியங்களை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் போலந்து மக்களுடனான திருப்பீட அமைப்பு


அக்.24,2011. போலந்து நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியிலும் வாழும் அந்நாட்டு மக்களுடன் ஆன திருப்பீடத்தின் உறவை மேம்படுத்தவும், அம்மக்களின் கலாச்சார, மத, மேய்ப்புப்பணி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளில் ஊக்கமளிக்கவும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் திருப்பீடத்தில் துவக்கப்பட்ட அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று சந்தித்து உரையாடினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
போலந்து திருச்சபையின் ஆன்மீகப் பாரம்பரியங்களை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, அருளாளர் இரண்டாம் ஜான் பாலின் படிப்பினைகளையும், மேய்ப்புப்பணி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளையும், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், பிரசுரங்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் மக்களுக்கு அறிவித்து வருவதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார் திருத்தந்தை.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் குருத்துவப் பயிற்சிக்குப் பெருமளவில் உதவி வரும் அருளாளர் இரண்டாம் ஜான் பால் பெயரிலான இந்த அமைப்பு, உரோம் நகர் வரும் திருப்பயணிகளுக்கு ஆற்றி வரும் சேவையையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.