கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை – ஓர் ஆய்வு முடிவு
அக்.22,2011. கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மூளைப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை
என்று, இது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கில்
வாழும் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேரிடம் சுமார் இருபது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின்
பின்னர் இந்த முடிவு கிடைத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கைத்தொலைபேசி
பயன்படுத்துபவர்களுக்கும், அவ்வகையில் கைத்தொலைபேசி பயன்படுத்தாதவர்களுக்கும் இடையே மூளைப்
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஒரே அளவில்தான் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரித்தானிய
மருத்துவப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆயினும், வியாபாரத்
தேவைகளுக்காக கைபேசிகளைப் பயன்படுத்துவோர் இவ்வாய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை
என்று சொல்லி, சில நிபுணர்கள் இந்த ஆய்வைக் குறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.