பிலிப்பீன்ஸில் கொலையுண்ட இத்தாலிய குருவுக்கான திருத்தந்தையின் இரங்கற் செய்தி
அக் 20, 2011. பிலிப்பீன்ஸில் பணியாற்றி வந்த இத்தாலிய குரு ஃபவுஸ்தோ தெந்தோரியோ கொலை
செய்யப்பட்டுள்ளது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடும் இரங்கற்தந்தி,
அக்குரு பணியாற்றிய Kidapawan மறைமாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. Kidapawan மறைமாவட்ட
ஆயர் ரோமுலு தெ லா குரூஸுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்ச்சீசியோ பெர்த்தோனெயால் அனுப்பப்பட்டுள்ள இரங்கற் தந்தி, அம்மறைமாவட்ட விசுவாசிகளுக்கும்,
அவர் சார்ந்திருந்த PIME சபையின் உடன் குருக்களுக்கும், அவரின் மறைவால் துயருறும் அனைவருக்கும்
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக உரைக்கிறது. பிலிப்பின்ஸ் மக்களிடையே
பல ஆண்டுகளாக மனவுறுதியுடன் பணியாற்றி வந்த குரு ஃபௌவுஸ்தீனோவின் சாட்சிய வாழ்வுக்கு
நன்றி கூறும் அதேவேளை, நீதியும் அமைதியும் இணக்கவாழ்வும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும்
நோக்கில் அனைவரும் வன்முறைகளைக் கைவிட்டுப் பணியாற்றவேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது
திருத்தந்தையின் இரங்கற்செய்தி.