கைதிகள் பரிமாற்றம் நடைபெறுவது மத்திய கிழக்குப் பகுதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்
- ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன்
அக்.19,2011. இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன குழுவுக்கும் இடையே தற்போது கைதிகள் பரிமாற்றம்
நடைபெறுவது மத்திய கிழக்குப் பகுதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன்
கூறினார் ஐ.நா.வின் பொதுச்செயலர் பான் கி மூன். இச்செவ்வாயன்று நடைபெற்ற இந்தக் கைதிகள்
பரிமாற்றம் குறித்து தன் மகிழ்வை வெளிப்படுத்திய பான் கி மூன், இப்பகுதியில் நிரந்தர
அமைதி உருவாக இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார். Gilad
Shalit என்ற இஸ்ரேல் படை வீரரின் விடுதலைக்கு ஈடாக, 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்
விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, படை வீரர் Shalitம்
477 பாலஸ்தீனிய கைதிகளும் இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்தக் கைதிகள்
பரிமாற்ற ஒப்பந்தத்திற்காக அதிகம் உழைத்த எகிப்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாட்டு அரசுகளுக்கு
பான் கி மூன் தன் நன்றியைத் தெரிவித்தார்.