அக்.15,2011. சோப்புப் போட்டுத் தண்ணீரில் கைகளைக் கழுவுதல் நோய்கள் வராமல் காத்துக்
கொள்வதற்கு மிகச் சிறந்த வழி, குறிப்பாகச் சிறார் கைகழுவுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்க
வேண்டுமென்று ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப் கூறியது. இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட
அனைத்துலக கைகழுவுதல் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கூறிய இந்நிறுவனம், இப்பழக்கத்தின்
மூலம், வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் போன்ற வியாதிகளை தடுக்கலாம் என்று கூறியது. ஆப்கானிஸ்தானில்
1,700 பள்ளிகளில் 17 இலட்சம் சிறாருக்கும் எரிட்ரியாவில் 1,272 பள்ளிகளில் 3,26,809 சிறாருக்கும்
என 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உலக தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிகழ்ச்சிகளை
நடத்தியது ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பு. இராஜஸ்தான் மாநிலத்தின் 80 இலட்சம் சிறாரும்,
பாகிஸ்தானின் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரும் இவ்வுலக தின நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டனர்.