அக்.14,2011. ஜப்பானின் டோக்கியோ நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கதிரியக்கம்
காணப்பட்டதால், ஃபுக்குசிமா அணுஉலை விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடு குறித்த அச்சங்கள்
மேலும் அதிகரித்திருக்கின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. டோக்கியோ, ஃபுக்குசிமாவிலிருந்து
230 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றபோதிலும், அந்நகரிலும் ஃபுக்ககுசிமா அணுவிபத்தால்
ஏற்பட்ட கதிரியக்கம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த மார்ச் மாதத்தில்
ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இடம்பெற்ற அணுஉலை விபத்தையடுத்து கதிரியக்கத்தை
அளவிடும் கெய்கர் மானியின் விற்பனை ஜப்பானில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை,
ஃபுக்குசிமா பகுதியிலிருந்த மூன்று இலட்சத்து அறுபதினாயிரம் சிறார்களைப் பரிசோதிப்பதற்கான
ஓர் ஆய்வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் கூறுகின்றன.