இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் தீவிரவாத இசுலாம், தலத்திருச்சபைக்குப் பிரச்சனைகளை
அதிகரிக்கின்றது – ஆயர் Situmorang
அக்.08,2011. உலகின் மிகப் பெரிய இசுலாமிய நாடாகிய இந்தோனேசியாவில் அதிகரித்து வரும்
தீவிரவாத இசுலாம், கத்தோலிக்கத் தலத்திருச்சபைக்குப் பிரச்சனைகளை அதிகரித்து வருகிறது
என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Martinus Situmorang கூறினார். அட் லிமினா
சந்திப்பையொட்டி உரோமையில் இருந்த இந்தோனேசிய ஆய்கள் சார்பாகப் பேசிய ஆயர் Situmorang,
இந்த இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் தங்களின் இருப்பை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக அதிகமாக
உணர்த்தி வருவதால் கத்தோலிக்கர் மிகுந்த கவலை கொண்டுள்ளனர் என்றார். இந்தோனேசியாவின்
ஏறக்குறைய 24 கோடியே 50 இலட்சம் மக்களில் சுமார் 3 விழுக்காட்டினராக இருக்கும் கத்தோலிக்கர்
பொதுவாக முஸ்லீம்களுடன் நல்ல உறவுடன் இருக்கின்றனர் என்றும் ஆயர் கூறினார். நாட்டின்
எல்லா நிலைகளிலும் இருக்கும் அதிகாரிகள் முஸ்லீம் தீவிரவாதிகளுடன் எப்போதும் தொடர்பு
கொண்டிருக்கவில்லை எனினும், இந்தத் தீவிரவாதக் குழுக்கள் தாங்கள் விரும்புவதைச் செய்ய
அனுமதிக்கப்படுவதால் கைதுகள் மற்றும் தண்டனைகளிலிருந்து அக்குழுக்கள் தப்பித்து விடுகின்றன
என்றார் ஆயர். இந்தோனேசியாவின் 32 மாநிலங்களில் ஒரு மாநிலம் மட்டும் ஷாரியா இசுலாமியச்
சட்டத்தால் ஆளப்படுகிறது. இன்னும் 16 மாநிலங்களின் 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த
இசுலாமியச் சட்டத்தால் தூண்டப்பட்ட சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று ஊடகங்கள்
கூறுகின்றன.